கோப்பையை வெல்லாத ஆர்சிபி
விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி இன்று துபாயில் நடைபெறவுள்ள ஐபிஎல்லின் மூன்றாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதுவரை அந்த அணி ஐபிஎல்லில் கோப்பையை வெல்லாத நிலையில் மூன்று முறை இறுதிப்போட்டி வரை வந்து கோப்பையை தவறவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிலாக்சாக உள்ளது
இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட அணி வீரர்கள் சிறப்பான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அணி வீரர்கள் அனைவரும் மிகவும் ரிலாக்சாக உள்ளதாகவும் சிறப்பாக தயராகியுள்ளதாகவும் தெரிவித்துள்ள கேப்டன் விராட் கோலி, அணியாக ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடுவோம் என்றும் கூறியுள்ளார்.
வில்லியர்ஸ் உற்சாகம்
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்காக தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும், வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பதாகவும் அணியின் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார். அணியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள அவர், அணியின் வீரர்கள் மொயீன் அலி, ஆரோன் பின்ச், ஆடம் ஜம்பா மற்றும் ஜோஸ் பிலிப் ஆகியோர் நம்பிக்கை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பாக விளையாட வேண்டும்
அவர்களின் ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் வில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அணியில் இணைந்து இந்த சீசனில் விளையாடவுள்ள ஆரோன் பின்ச், ஐபிஎல் போட்டிகள் எளிதானது அல்ல என்று தெரிவித்துள்ளார். அணியின் ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் தங்களது சிறப்பான திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.