
சிஎஸ்கே அணி நிலை
சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் முதல் ஏழு போட்டிகளில் ஐந்தில் தோல்வி அடைந்து இருந்தது. அடுத்த ஏழு போட்டிகளில் சிஎஸ்கே எப்படி ஆடப் போகிறதோ அதைப் பொறுத்தே அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு அமையும் என்ற நிலை இருந்தது.

பிளே-ஆஃப் வாய்ப்பு
அடுத்த ஏழு போட்டிகளில் ஆறு போட்டிகளில் வென்றால் நிச்சயம் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம். ஐந்து போட்டிகளில்வென்றால் மற்ற அணிகள் பெறும் புள்ளிகள், நெட் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் வாய்ப்பு அமையும்.

தோனி செய்த அதிரடி மாற்றம்
இந்த நிலையில், தன் எட்டாவது போட்டியில் சிஎஸ்கே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சந்தித்தது. அந்தப் போட்டியில் அதிரடியாக தோனி சில மாற்றங்களை செய்தார். மேலும், வீரர்கள் அனைவரும் முந்தைய ஏழு போட்டிகளைக் காட்டிலும் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றிக்காக போராடினார்கள்.

சாம் கர்ரன்
தோனி செய்ததிலேயே அதிரடி மாற்றம் சாம் கர்ரனை அணியில் துவக்க வீரராக ஆட வைக்கப்பட்டதுதான். இளம் வீரரான சாம் கர்ரன் 21 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இது பவர்பிளே ஓவர்களில் சிஎஸ்கே அணி அதிக ரன்களை பெற காரணமாக இருந்தது.

ஏழு பந்துவீச்சாளர்கள்
அடுத்து அணியில் ஏழு பந்துவீச்சாளர்களை ஆட வைத்தும் ஆச்சரியம் அளித்தார் தோனி. தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், சாம் கர்ரன் என மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும், மித வேகப் பந்துவீச்சாளரான பிராவோவும், ஜடேஜா, கரன் சர்மா, பியுஷ் சாவ்லா என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும் அணியில் இடம் பெற்றனர்.

வெற்றிநடை
ஏழு பந்துவீச்சாளர்கள் இருந்ததால் ஹைதராபாத் அணியால் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு திட்டத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அடுத்த ஓவரை யார் வீசுவார்கள் என்பதே புரியாமல் தங்கள் சேஸிங்கை திட்டமிட முடியாமல் ஹைதராபாத் அணி தவித்து தோல்வி அடைந்தது.

இம்ரான் தாஹிர்
ஹைதராபாத் போட்டி போல அடுத்து வரும் போட்டிகளில் இம்ரான் தாஹிர் அணியில் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது. 41 வயதான இம்ரான் தாஹிர் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக இருந்தார். அதிக விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

வெளிநாட்டு வீரர்கள்
இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் வாட்சன், பாப் டுபிளெசிஸ், சாம் கர்ரன், பிராவோ அணியில் இருப்பதால் வெளிநாட்டு வீரரான இம்ரான் தாஹிரை அணியில் சேர்க்க முடியவில்லை. ஆனால், இனி வரும் போட்டிகளில் இம்ரான் தாஹிர் சிஎஸ்கே அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

காரணம் பிட்ச்
இம்ரான் தாஹிரை இத்தனை போட்டிகளில் ஆட வைக்காமல் இனி வரும் போட்டிகளில் ஆட வைப்பதில் பெரிய திட்டம் உள்ளது. ஐபிஎல் போட்டிகள் நடக்கும் ஆடுகளங்கள் முதல் பாதி லீக் சுற்று வரை பெரிய அளவில் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை.

எதிரணிகள் திணறும்
ஆனால், தற்போது துபாய், ஷார்ஜா, அபுதாபி என மூன்று மைதானங்களும் சுழற் பந்துவீச்சுக்கு ஏற்ப மாறி உள்ளது. அந்த நேரத்தில் தாஹிர் களமிறக்கப்பட்டால் அது பெரிய அளவில் பலன் தரும். இதுவரை அவர் முதல் பாதி லீக் சுற்றில் ஆடாததால் இரண்டாம் பாதியில் தாஹிர் பந்துவீச்சை இந்த சீசனில் முதல் முறையாக எதிர்கொள்ளும் எதிரணிகள் நிச்சயம் தடுமாறும். இதுதான் தோனியின் திட்டம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











