
ஐபிஎல் நிலை
2020 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதன் பின்னும் குறையாத நிலையில் ஐபிஎல் நிலை கேள்விக் குறியாக இருந்தது. இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்கத் துவங்கி உள்ளது.

ஐபிஎல் திட்டம்
அதை அடுத்து பிசிசிஐ 2020 ஐபிஎல் தொடரை சரியான தேதிகள் கிடைத்தால் நடத்தி விடலாம் என முயற்சி செய்து வந்தது. 2020 டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட வாய்ப்பு இருப்பதை உணர்ந்த பிசிசிஐ அந்த நாட்களில் ஐபிஎல் தொடரை நடத்த முடிவு செய்தது.

வழிவிட்ட உலகக்கோப்பை
நீண்ட தாமதத்திற்கு பின் ஐசிசி 2௦20 டி20 உலகக்கோப்பை தொடரை அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைத்தது. உலகக்கோப்பை தொடர் வலிவிட்டதை அடுத்து பிசிசிஐ துரிதமாக செயல்பட்டு ஐபிஎல் தொடரை நடத்த களமிறங்கி உள்ளது. இந்தியாவில் ஐபிஎல் நடத்தும் சூழ்நிலை இல்லை.

ஐக்கிய அரபு அமீரகம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால், வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. முன்னதாக இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாடுகளில் ஐபிஎல்-ஐ நடத்த அழைப்பு விடுத்து இருந்தன. அதில் ஐக்கிய அரபு அமீரகத்தை தேர்வு செய்தது பிசிசிஐ.

தேதிகள்
தற்போது எட்டு ஐபிஎல் அணிகளுக்கும் பிசிசிஐ ஐபிஎல் நடக்கும் தேதிகள் குறித்து தகவல் கூறி உள்ளதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரையிலான காலகட்டத்தில் நடக்க உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்டில் பயணம்
ஐபிஎல் வீரர்கள் ஒரு மாத காலத்துக்கு பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 20 அன்றே ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. சுமார் நான்கு வார காலம் வீரர்கள் தங்கள் அணியுடன் இணைந்து பயிற்சி செய்ய உள்ளனர்.

ஆஸ்திரேலிய தொடர் சிக்கல்
செப்டம்பர் 15 அன்று தான் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடர் முடிவுக்கு வருகிறது. அதனால், அந்த வீரர்கள் தனிமைப்படுத்தப்படாமல் எப்படி ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கான தீர்வு குறித்து விவாதம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு வீரர்கள்
வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது தான் முக்கிய விஷயமாக அணிகள் கருதுகின்றன. அந்த வகையில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் தங்கள் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளன.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா நிலை
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடர் முடிந்த உடன் தங்கள் வீரர்களை அனுப்ப இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்புகளும் ஒப்புதல் கூறி உள்ளன. எனினும், அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க முடியுமா? என்பதே சிக்கலாக உள்ளது.

விமான சேவை கிடைக்குமா?
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வீரர்கள், ஊழியர்கள் செல்வது மட்டுமின்றி ஒளிபரப்பு உபகரணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு விமான சேவை அவசியம். ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் விமான சேவை துவங்கவில்லை. அதனால், தனியார் விமான சேவையை நாட வேண்டிய நிர்பந்தத்தில் ஐபிஎல் அணிகளும், பிசிசிஐ-யும் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications