அந்த 14 நாள் தான் சிக்கல்.. மழை காலம் முடிந்த உடன் ஆரம்பம்.. பிசிசிஐ முடிவு!
மும்பை : மழைக்காலம் முடிந்த பின் 2020 ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ தயாராகி வருவதாக அதன் தலைமை செயல் அதிகாரி கூறி உள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள 2௦20 ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அமலில் இருக்கும் லாக்டவுன் கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டு வருவதால் பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்த ஆயத்தமாகி வருகிறது.
Recommended Video

2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் லாக்டவுன் காரணமாக கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் இருந்த சிக்கலும் முக்கிய காரணம். தற்போது லாக்டவுன் விதிகள் தளர்த்தப்பட்டு வருவதால் ஐபிஎல் குறித்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

எப்போது நடத்தலாம்?
ஐபிஎல் தொடர் இனி செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் நடத்தவே அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால், அதற்கு மற்ற கிரிக்கெட் ஆடும் நாடுகள் மற்றும் ஐசிசி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதே போல மற்றொரு சிக்கலும் உள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர்
அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டாலோ, ரத்து செய்யப்பட்டாலோ மட்டும் தான் ஐபிஎல் தொடரை அந்த காலகட்டத்தில் நடத்த முடியும். டி20 உலகக்கோப்பை தொடரை ஐசிசி தள்ளி வைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது பிசிசிஐ.

கிரிக்கெட் மீளும் வழி
டி20 உலகக்கோப்பை தொடரை விட ஐபிஎல் தொடர் தான் கிரிக்கெட்டை மீட்கும் என உறுதியாக உள்ளது பிசிசிஐ. அது பற்றி பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி கூறுகையில், "இந்திய பொதுத் தேர்தலில் ஓட்டுப் போட்ட மக்களை விட அதிகமாக ஐபிஎல் தொடரை கண்டு களித்துள்ளனர்." என குறிப்பிட்டார்.

14 நாட்கள் சிக்கல்
ஒரே நாளில் எல்லாம் இயல்பு நிலைக்கு வந்து விடாது என்றவர், வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவது தான் சவாலான வேலை என்றார். குறிப்பாக வீரர்கள் பயிற்சியை துவங்கும் முன்பே 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அதன் பின் பயிற்சி செய்து, அதன் பின்பே போட்டிகளை துவக்க முடியும் என்றார்.

மழை காலம் முடியட்டும்
இந்தியாவில் தற்போது மழைக் காலம் துவங்கி உள்ளது. மழைக் காலம் முடிந்த பின்னர் ஐபிஎல் தொடர் பற்றி பிசிசிஐ நடவடிக்கைகள் எடுக்கும் என ராகுல் ஜோஹ்ரி கூறினார். மழைக் காலம் முடிந்த பின் ஐபிஎல் நடக்கும் என ஐபிஎல் அணிகள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications