இஷாந்த் சர்மா காயம்
இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் முக்கிய பந்துவீச்சாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு போட்டியில் மட்டுமே ஆடும் வாய்ப்பை பெற்றார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
தொடரில் இருந்தே விலகல்
இஷாந்த் சர்மாவின் நெஞ்சுக் கூட்டில் உள்ள தசை நார் கிழிந்து இருப்பதாக தெரிய வந்தது. அவர் காயம் குணமாக பல நாட்கள் ஆகும் என்பதால் அவர் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். டெல்லி அணியில் இருந்து பாதி தொடரில் விலகும் இரண்டாவது வீரர் இஷாந்த்.
மாற்று வீரர் வேண்டும்
டெல்லி அணி உடனடியாக இஷாந்த் சர்மாவுக்கு மாற்று வீரர் வேண்டும் என ஐபிஎல் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி உள்ளது. மாற்று வேகப் பந்துவீச்சாளர் அவசியம் என கருதுகிறது டெல்லி அணி. இஷாந்த் சர்மா கட்டுக் கோப்பாக பந்து வீசுவார். அவருக்கு இணையான மாற்று வீரரை விரைவாக தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது டெல்லி.
அமித் மிஸ்ரா விலகல்
சில நாட்கள் முன்பு அந்த அணியின் சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். அவருக்கு இன்னும் மாற்று வீரரை தேர்வு செய்யவில்லை டெல்லி அணி. இந்த நிலையில், இஷாந்த் சர்மா விலகி உள்ளார்.
ரிஷப் பண்ட் காயம்
மற்றொரு முக்கிய வீரரான ரிஷப் பண்ட் காயம் காரணமாக கடந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி அணியில் சேர்க்கப்பட்டார். பண்ட் இல்லாதது டெல்லி அணிக்கு பெரும் இழப்பாக மாறியது.
டெல்லி அணி வெற்றிகள்
டெல்லி அணி இதுவரை 7 போட்டிகளில் ஆடி 5 வெற்றிகள் பெற்றுள்ளது. இதில் ரிஷப் பண்ட் இடம் பெறாத மும்பை போட்டியில் அந்த அணி தோல்வி அடைந்து இருந்தது. இதுவரை வெற்றிகள் பெற்றாலும், இனி முக்கிய வீரர்கள் காயம் மற்றும் விலகலால் அந்த அணி என்ன செய்யப் போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிக்கல் ஆரம்பம்
இஷாந்த் சர்மா இல்லா விட்டாலும் சமாளித்த டெல்லி அணி, மேலும் ஒரு வேகப் பந்துவீச்சாளர் காயம் அடைந்து போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டால் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். அதன் காரணமாகவே மாற்று வீரரை கேட்டு உள்ளது அந்த அணி.