கொரோனா வைரஸ்
தீபக் சாஹர் சிஎஸ்கே அணியில் சரியான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாத போது தோனியால் பவர்பிளே மற்றும் கடைசி ஓவர் வேகப் பந்துவீச்சாளராக வளர்க்கப்பட்டவர். இரண்டு ஆண்டுகள் சிஎஸ்கே அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்த அவருக்கு 2020 ஐபிஎல் தொடருக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
பார்ம் அவுட்
அதன் பின் மிகக் குறைந்த அளவில் பயிற்சி செய்து நேரடியாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றார் தீபக் சாஹர். முதல் போட்டி முதலே அதிக ரன்களை வாரி இறைத்து வந்தார். தன் இயல்பான பந்துவீச்சை அவர் வெளிப்படுத்தவில்லை.
2018, 2019இல் எப்படி?
2018 மற்றும் 2019 ஐபிஎல் தொடர்களில் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட் வீழ்த்தி இருந்தார். 2018இல் பவர்பிளேவில் மட்டும் 32 ஓவர்களில் 10 விக்கெட் வீழ்த்தி இருந்தார். 2019இல் 50 பவர்பிளே ஓவர்களில் 15 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
2020 ஐபிஎல்
இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் தீபக் சாஹர் இதுவரை 16 பவர்பிளே ஓவர்கள் வீசி உள்ளார். அதில் வெறும் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார். ஒட்டுமொத்தமாக ஆறு போட்டிகளில் பவர்பிளே மட்டுமின்றி அனைத்து ஓவர்களிலும் சேர்த்து 5 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார்.
கொல்கத்தா போட்டி
5 விக்கெட் வீழ்த்தினாலும் அதிக ரன்களை வாரி இறைத்து வருகிறார். பஞ்சாப் போட்டி தவிர்த்து மற்ற போட்டிகளில் அதிக ரன்கள் கொடுத்திருந்தார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மற்ற சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசிய நிலையில் சாஹர் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.
சமாளித்த தோனி
தீபக் சாஹர் மோசமாக வீசிய நிலையில், பிற வேகப் பந்துவீச்சாளர்கள் சாம் கர்ரன் மற்றும் ஷர்துல் தாக்குரை வைத்து சமாளித்தார் கேப்டன் தோனி. கர்ரன் 2, தாக்குர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 4 ஓவர்களில் 26 மற்றும் 28 ரன்கள் மட்டுமே கொடுத்தனர்.
சிக்கலில் சிஎஸ்கே
சிஎஸ்கே அணி தோல்விப் பாதையில் இருந்து வெற்றிக்கு திரும்பி உள்ள நிலையில், அணியில் தீபக் சாஹர் மட்டுமே கவலை அளித்து வருகிறார். வேறு மாற்று இந்திய வேகப் பந்துவீச்சாளரும் இல்லாத நிலையில், சாஹர் விரைவில் பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.