
சிஎஸ்கே வெற்றி
சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரில் தன் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் மூன்று தோல்விகளை சந்தித்து மோசமான நிலையில் இருந்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே.

கொல்கத்தா போட்டி
வெற்றிப் பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே அணி அடுத்து கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அணியை மாற்றாது என கருதப்பட்டது. ஆனால், தோனி முக்கிய மாற்றம் ஒன்றை செய்தார். அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளர் பியுஷ் சாவ்லாவை நீக்கினார்.

ஏன் பியுஷ் சாவ்லா இல்லை?
பியுஷ் சாவ்லா கடந்த மூன்று சீசன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆடி வந்தவர். அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு அவரது பந்துவீச்சில் எப்படி ரன் குவிக்க வேண்டும் என தெரியும் என்பதால் பியுஷ் சாவ்லாவை நீக்கி விட்டு கரன் சர்மாவை சேர்த்தார் தோனி.

கரன் சர்மா பந்துவீச்சு
கரன் சர்மா மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆனால், அசத்தலாக பந்துவீசிய அவர் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். நிதிஷ் ராணா, சுனில் நரைன் என இரண்டு அதிரடி பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு திருப்பம் அளித்தார்.

ஜடேஜாவுக்கு ஓவரே இல்லை
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் ஜடேஜாவுக்கு ஓவரே கொடுக்கப்படவில்லை. நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ஒருவருக்கு ஓவர் கொடுக்காமல், அனுபவம் குறைந்த கரன் சர்மாவை நம்பி 4 ஓவர்களையும் தோனி அளித்தது ஆச்சரியம் அளித்தது.

சாவ்லா இடம் காலி
மேலும், தற்காலிகமாக பியுஷ் சாவ்லாவுக்கு பதிலாக அணியில் இடம் பெற்ற கரன் சர்மா, அவரது இடத்தையே காலி செய்துள்ளார். பியுஷ் சாவ்லா ஓவருக்கு 8 ரன்களுக்கும் மேல் வாரி இறைத்து வந்த நிலையில், கரன் சர்மா அவருக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளார்.

வாய்ப்பு அளிப்பாரா தோனி?
சிஎஸ்கே அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்கள் கொடுப்பதாக விமர்சனம் இருக்கும் நிலையில், கேப்டன் தோனி கரன் சர்மாவுக்கு அடுத்து வரும் போட்டிகளில் அதிக வாய்ப்பு அளிப்பார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











