
கவனத்தை ஈர்த்த வருண்
கடந்த 2019 ஆண்டு ஐபிஎல் தொடரில் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் வருண் சக்கரவர்த்தி. தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் தன் சுழற் பந்துவீச்சால் எதிரணிகளை சாய்த்து வந்தவர் தான் வருண் சக்கரவர்த்தி.

அஸ்வின் தேர்வு
அவரைப் பற்றி தெரிந்த அஸ்வின் தான் கேப்டனாக இருந்த பஞ்சாப் அணி மூலம் அவரை தன் அணியில் சேர்த்துக் கொண்டார். ஆனால், காயம் மற்றும் மோசமான செயல்பாடு காரணமாக பஞ்சாப் அணி அவரை விடுவித்தது. 2020 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அவர் பெயர் இடம் பெற்றது.

கொல்கத்தா அணியில் வருண்
மற்றொரு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த முறை அவரை வாங்கியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணிக்காக முதலில் ஆடிய வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசினார்.

வார்னர்
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்த தினேஷ் கார்த்திக் முயன்று வந்தார். பாட் கம்மின்ஸ்-ஐ தொடர்ந்து 3 ஓவர்கள் வீச வைத்தார். அப்போது ரன்கள் கட்டுக்குள் இருந்தாலும், பேர்ஸ்டோ விக்கெட் வீழ்ந்தாலும், வார்னர் மட்டும் நிலைத்து நின்றார்.

வருண் சக்கரவர்த்தி
கம்மின்ஸ் 3 ஓவர்கள் வீசி முடித்த பின் சுழற் பந்துவீச்சை முழு அளவில் பயன்படுத்த முடிவு செய்த தினேஷ் கார்த்திக் வருண் சக்கரவர்த்தியை அழைத்தார். தான் வீசிய முதல் ஓவரில் வருண் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

கேட்ச் கொடுத்தார்
அடுத்த ஓவரின் முதல் பந்தில் வார்னர் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வார்னர் அப்போது 30 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். வருண் சக்கரவர்த்தி கடந்த சீசனில் சரியாக ஆடாத நிலையில், இந்த சீசனில் வார்னர் விக்கெட் எடுத்து தன் முத்திரையை பதித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











