
நடராஜன்
சேலத்தை சேர்ந்தவர் தங்கராசு நடராஜன். யார்க்கர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் அவர் டிஎன்பிஎல் தொடரில் அடையாளம் காணப்பட்டு 2017இல் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். அந்த ஆண்டில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

தூக்கிய ஹைதராபாத்
இந்த நிலையில், 2017ஆம் ஆண்டின் முடிவில் அவரை நீக்கியது பஞ்சாப் அணி. 2018 ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ஏலத்தில் வாங்கியது. அந்த அணியில் இரண்டு ஆண்டுகள் வாய்ப்பின்றி இருந்தார் அவர்.

தாமதமாக கிடைத்த வாய்ப்பு
2020 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் சரியான வேகப் பந்துவீச்சாளர் இல்லாத நிலையில் நடராஜன் முதல் போட்டியில் இருந்தே வாய்ப்பு பெற்றார். அவர் சிறப்பாக பந்து வீசி அணியின் முக்கிய பந்துவீச்சாளராக மாறினார்.

இந்திய அணியில் வாய்ப்பு
பின்னர் இந்திய டி20 அணியிலும் சேர்க்கப்பட்டார் நடராஜன். இந்த நிலையில், அவரை முதலில் தேர்வு செய்தும் சரியாக அவரை பயன்படுத்தாமல் விரட்டி விட்ட பஞ்சாப் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா சோகத்தில் இருக்கிறார். பஞ்சாப் அணி இந்த சீசனில் பிளே-ஆஃப் கூட செல்லாதது குறிப்பிடத்தக்கது.

வருண் சக்கரவர்த்தி
அதே போல, மிஸ்டரி ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தியையும் முதலில் தேர்வு செய்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தான். 2019 ஐபிஎல் தொடரில் அவரை 8.4 கோடிக்கு வாங்கி அனைவரையும் மிரள வைத்தது அந்த அணி. ஆனால், காயம் காரணமாக அவரால் அந்த சீசனில் சரியாக ஆட முடியவில்லை.

கொல்கத்தா தந்த வாய்ப்பு
2020 ஐபிஎல் தொடரில் அவரை விடுவித்தது பஞ்சாப். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை வாங்கியது. அந்த அணிக்காக ஆடிய அவர் தன் பந்துவீச்சால் ரன்களை கட்டுப்படுத்தி, விக்கெட்களும் வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டார்.

அணியில் இடம்
இதை அடுத்து அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு தேடி வந்தது. இந்திய டி20 அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அவருக்கு காயம் ஏற்பட்டு இருந்ததால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா அணியின் முக்கிய வீரராக விளங்கியதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வாய்ப்பு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2017இல் நடராஜனையும், 2019இல் வருண் சக்கரவர்த்தியையும் வெளியேற்றியது. அவர்களுக்கு அப்போது இன்னும் ஒரு சீசனில் வாய்ப்பு அளித்து இருந்தால் அவர்கள் தற்போது பஞ்சாப் அணியின் முக்கிய வீரர்களாக மாறி இருக்கக் கூடும்.

பஞ்சாப் உரிமையாளர் புலம்பல்
பஞ்சாப் அணி 2020 ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் ஆட்டத்தால் கடைசி சில போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது. எனினும், பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது அந்த அணி. இந்த நிலையில், அந்த அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா நடராஜன், வருண், சாம் கர்ரன் போன்ற வீரர்கள் தங்கள் அணியில் ஆடி இருந்தால் எப்படி இருந்திருக்கும்? என நடக்காததை எண்ணி புலம்பி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











