
பஞ்சாப் - கொல்கத்தா போட்டி
2௦20 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. லீக் சுற்றின் 24வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்றது. அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது.

மாற்றம்
கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியை திட்டமிட்டு வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்தப் போட்டியில் இளம் வீரர் சிவம் மாவிக்கு ஓய்வு அளித்து பிரசித் கிருஷ்ணாவை அணியில் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் காட்ரேல் நீக்கப்பட்டு, கிறிஸ் ஜோர்டான் அணியில் சேர்க்கப்பட்டார்.

கொல்கத்தா அணி பேட்டிங்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராகுல் திரிபாதி 4, நிதிஷ் ராணா 2 விக்கெட்களை விரைவாக இழந்தது. ஷுப்மன் கில் நிலைத்து ஆடினார். இயான் மார்கன் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். அவர் 23 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தினேஷ் கார்த்திக் அதிரடி
அடுத்து ஐந்தாம் வரிசையில் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய வந்தார். அவர் அதிரடியாக ரன் குவித்து மிரட்டினார். ஷுப்மன் கில் நிதான ஆட்டம் ஆட, தினேஷ் கார்த்திக் அதிரடியாக 29 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். 8 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து இருந்தார்.

கொல்கத்தா ஸ்கோர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ரவி பிஷ்னோய் குறைந்த அளவில் ரன்கள் கொடுத்து சிறப்பாக பந்து வீசி இருந்தனர். பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் சேஸிங் செய்ய வந்தது.

அபார துவக்கம்
மீண்டும் ஒரு முறை 100 ரன்களுக்கும் மேல் நிலைத்து நின்று அபார துவக்கம் அளித்தது மயங்க் அகர்வால் - கேஎல் ராகுல் ஜோடி. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 115 ரன்கள் சேர்த்தது. மயங்க் அகர்வால் 58 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார்.

வெற்றிக்கு அருகே பஞ்சாப்
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடி ஆட்டம் ஆடினார். 5 ஓவர்களில் 48 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்து 3 ஓவர்களில் 22 ரன்கள் தேவை என்ற நிலைக்கு முன்னேறியது பஞ்சாப் அணி. அந்த அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி ஆனது.

பூரன் அவுட்
கொல்கத்தா அணியில் ரஸ்ஸல் காயமடைந்த நிலையில், கடைசி ஓவர்களை வேறு பந்துவீச்சாளர்களை வைத்து சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் கேப்டன் தினேஷ் கார்த்திக். இந்த நிலையில், 17.2 ஓவரில் பூரன் தவறான ஷாட் ஆடி பவுல்டு அவுட் ஆனார்.

கொல்கத்தா வெற்றி
அதைத் தொடர்ந்து 19வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங், கேஎல் ராகுல் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் மேக்ஸ்வெல், மந்தீப் சிங் கடைசி ஓவரை எதிர்கொண்டனர். அந்த ஓவரை சுனில் நரைன் வீசினார். முதல் நான்கு பந்துகளை மேக்ஸ்வெல் சந்தித்து 7 ரன்கள் எடுத்தார். ஐந்தாவது பந்தை சந்தித்த மந்தீப் சிங் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் டை செய்யலாம் என்ற நிலையில் மேக்ஸ்வெல் ஃபோர் மட்டுமே அடித்தார். கொல்கத்தா அணி 2 ரன்கள் எனும் மிகக் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி வெற்றி பெற வேண்டிய போட்டியில் நூலிழையில் தோல்வி அடைந்தது.


Click it and Unblock the Notifications