அட்டகாசமான வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அட்டகாசமான வெற்றியை பதிவு செய்தது. அந்தப் போட்டியிலேயே பந்துவீச்சு, பேட்டிங்கில் துவக்க வீரர்கள் சரியில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
பந்துவீச்சு பலவீனம்
ஆனாலும், மும்பை எனும் வலுவான அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதால் அந்த விமர்சனங்கள் பெரிதாக தெரியவில்லை. ஆனால், அடுத்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216 ரன்கள் குவித்த போது சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பலவீனம் வெட்ட வெளிச்சமாகியது.
திட்டமே இல்லாமல்..
அதே போட்டியில், ஆமை வேகத்தில் சேஸிங் செய்து வெற்றி கைமீறிப் போன பின் அதிரடி ஆட்டம் ஆடி பேட்டிங்கில் திட்டமே இல்லாமல் சொதப்பியது சிஎஸ்கே. அது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதே பிரச்சனைகள் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் தொடர்ந்தது.
கூடுதல் பந்துவீச்சாளர்கள் இல்லை
பந்துவீச்சில் சிஎஸ்கே சொதப்ப முக்கிய காரணம் கூடுதல் பந்துவீச்சாளர்கள் இல்லாதது தான். பேட்டிங் பலவீனமாக இருப்பதால் தோனி சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டும் அணியில் தேர்வு செய்து வருகிறார். அது பந்துவீச்சில் ஓவர் மாற்றும் போது சிக்கலை ஏற்படுத்துகிறது. ஒரு பந்துவீச்சாளர் ரன்களை வாரி இறைத்தாலும் மீண்டும் அவருக்கே ஓவர் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
சமநிலை
பேட்டிங்கை பலப்படுத்தாமல் கூடுதல் பந்துவீச்சாளரை தேர்வு செய்ய முடியாது. ஒரு பேட்ஸ்மேன் குறைந்தால் தான் கூடுதல் பந்துவீச்சாளரை தேர்வு செய்ய முடியும். பேட்டிங்கில் முக்கிய பலவீனமாக இருப்பது துவக்க வீரர்கள் முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் தான்.
பேட்டிங் செய்யவே திணறுகிறார்
வாட்சன் கூட பவுண்டரி அடிக்க முயற்சி செய்கிறார். ஆனால், முரளி விஜய் பேட்டிங் செய்யவே திணறுகிறார். மூன்று போட்டிகளிலும் சேஸிங்கில் அவரது திணறல் ஆட்டத்தால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு சிஎஸ்கே அணியின் திட்டம் சொதப்பியது.
சொற்ப ரன்கள்
முரளி விஜய் மூன்று போட்டிகளில் 1, 21, 10 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு முறை கூட அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடவில்லை. அவர் அதிக பந்துகளை வீணடிப்பது அல்லது விரைவில் விக்கெட்டை இழந்து விடுவதால் விக்கெட்டை தற்காத்து கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டம் ஆடி சேஸிங்கில் வெல்லலாம் என்ற சிஎஸ்கே அணியின் திட்டம் தோல்வி அடைந்து வருகிறது.
பீல்டிங் சொதப்பல்
அது மட்டுமின்றி முரளி விஜய் பீல்டிங்கிலும் சொதப்பி வருகிறார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மின் ஒளியில் தன்னால் பந்தை பார்க்க முடியவில்லை எனக் கூறி 2 ரன்களை கோட்டை விட்டார். அப்போது தோனி களத்திலேயே கோபம் அடைந்தார்.
தோனி, பிளெம்மிங் முடிவு
இரண்டு மோசமான தோல்விகளால் சிக்கலில் இருக்கும் சிஎஸ்கே அணி உடனடியாக தன் அணுகுமுறையில் பெரிய மாற்றத்தை செய்ய வேண்டி உள்ளது. தோனி, பிளெம்மிங் இருவரும் முரளி விஜய் மீது கடும் கோபத்தில் உள்ளனர். தோல்விக்கு பின் பேட்டிகளில் துவக்கம் சரியாக அமையவில்லை என அவரைத் தான் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்கள்.
பட்டியலில் முதல் இடம்
அந்த வகையில் முரளி விஜய் தான் நீக்கப்பட வேண்டிய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அடுத்த போட்டியில் அம்பதி ராயுடு அணிக்கு திரும்பும் பட்சத்தில் முரளி விஜய் அவருக்கு வழிவிட்டு அணியில் இருந்து நீக்கப்படுவார் எனத் தெரிகிறது.