
துவக்க ஆட்டக்காரராக விரும்பும் சுப்மன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் சுப்மன் கில், மிடில் ஆர்டரில் களமிறங்கி ஆடி வருகிறார். ஆனால் டி20 போட்டிகளில் தான் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாட விரும்புவதாக அவர் கூறியுள்ளார். துபாயில் ஐபிஎல் போட்டிகளுக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டுவரும் அவர், இதுகுறித்து பேசுகையில், தான் விளையாடும்போது எவ்வாறு தன்னுடைய ஸ்கோரை உயர்த்தலாம் என்பது குறித்தே கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

எந்த பிட்ச்சிலும் விளையாட முடியும்
யூஏஇ மற்றும் இந்திய பிட்ச்களுக்கு இடையில் அதிக ஒற்றுமைகள் காணப்படுவதாகவும் யூஏஇ பிட்ச்களுக்காக பேட்ஸ்மேன்கள் அதிகமாக மெனக்கெட தேவையில்லை என்றும் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இந்தியாவிலும் ஸ்லோ பிட்ச்களில் விளையாடியுள்ளதாகவும், தன்னால் எந்த பிட்ச்சிலும் விளையாட முடியும் என்றும் கில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் குறித்து கில் பாராட்டு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல்லின் இந்த சீசனில் விளையாடவுள்ள சுப்மன் கில், யூஏஇக்கு வருவதற்கு முன்னதாக பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் சார்பில் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிடம் பயிற்சி மேற்கொண்டார். இதனிடையே, யுவராஜ் சிங்குடன் பயிற்சி மேற்கொண்டது சிறப்பான அனுபவம் என்றும் அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் கில் கூறியுள்ளார்.

சிறப்பான ஷாருக்கான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் அணி வீரர்களுக்கு மிகச்சிறந்த உத்வேகத்தை அளிக்கக்கூடியவர் என்றும் கில் தெரிவித்துள்ளார். தான் அவரை தன்னுடைய முதல் போட்டிக்கு முன்னதாக சந்தித்தபோது, எதைப்பற்றியும் கவலைப்படாமல் திறமையை வெளிப்படுத்துமாறு அவர் கூறியதாகவும் இதை மிகப்பெரிய விஷயம் என்றும் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications