
2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மூன்று நகரங்களில் நடைபெற உள்ளது. அதற்காக எட்டு ஐபிஎல் அணிகளும் அங்கே சென்று முகாமிட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் இருக்க அனைத்து அணிகளும் கடும் விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன.

துபாயில் சிஎஸ்கே
சென்னையில் இருந்து கிளம்பிய சிஎஸ்கே அணி துபாயில் முகாமிட்டுள்ளது. மற்ற அணிகளைப் போல சிஎஸ்கே அணியும் முதல் வாரம் முழுவதும் குவாரன்டைனில் இருந்தது. மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு
அப்போது இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தீபக் சாஹர் மற்றும் ருதுராஜ் கெயிக்வாட் தான் அந்த வீரர்கள் என கூறப்படுகிறது. இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

சென்னை பயிற்சி முகாம்
துபாய் செல்லும் முன் சிஎஸ்கே அணி சென்னையில் பயிற்சி முகாமில் கலந்து கொண்டது. ஆறு நாள் நடந்த அந்த பயிற்சி முகாம் குறித்து தான் தற்போது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. அப்போது சிஎஸ்கே வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சிலர் கூறுகிறார்கள். ஆனால், அப்போது எடுத்த பரிசோதனைகளில் யாருக்கும் தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக இடைவெளி இல்லை
அந்த பயிற்சி முகாமிலும், சென்னை வரும் போதும், சென்னையில் இருந்து துபாய் சென்ற போதும் சிஎஸ்கே வீரர்கள் பலர் முகக் கவசம் அணிந்து கொள்ளவில்லை. அதே போல, சமூக இடைவெளியையும் பலரும் கடைபிடிக்கவில்லை.

ஐபிஎல் அணிகள் கோபம்
தற்போது சிஎஸ்கே அணியில் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மற்ற ஐபிஎல் அணிகள் அந்த விஷயங்களை சுட்டிக் காட்டி கோபம் கொண்டுள்ளன. சிஎஸ்கே அணி விதிமுறைகளை பின்பற்றும் விஷயத்தில் அலட்சியமாக இருந்ததாக குற்றம்சாட்டி உள்ளன.

அமைதி காக்கும் பிசிசிஐ
இது குறித்து முடிவு எடுக்க வேண்டிய பிசிசிஐ அமைதி காத்து வருகிறது. சிஎஸ்கே அணி குறித்து அறிக்கையில் கூட எதுவும் குறிப்பிடவில்லை பிசிசிஐ. ஆனால், மற்ற அணிகள் இது குறித்து வெளிப்படையாக பிசிசிஐ பேச வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றன.

சுரேஷ் ரெய்னா விலகல்
இதற்கிடையே சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் இருந்து விலகி இந்தியா வந்துள்ளார். அவர் 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என சிஎஸ்கே அறிவித்து மேலும் பரபரப்பை கூட்டி உள்ளது. அவர் கொரோனா வைரஸ் அச்சத்தால் விலகியதாக ஒரு தகவல் வலம் வருகிறது.

சிஎஸ்கே நிலை
சிஎஸ்கே அணி தற்போது பெரிய இக்கட்டில் உள்ளது. பாதிப்புக்கு உள்ளான அனைவரும் மீண்டால் மட்டுமே மற்ற அணிகள், சிஎஸ்கேவுடன் ஆட ஒப்புக் கொள்ளும் என்றும் ஒரு சிலர் கூறுகிறார்கள். சிஎஸ்கே பயிற்சி துவக்கவே இரண்டு வாரங்கள் ஆனாலும் அதில் ஆச்சரியமில்லை.


Click it and Unblock the Notifications











