எங்களையா டீமை விட்டு தூக்குனீங்க? ஆர்சிபி செய்த மாபெரும் தவறு.. பழி வாங்கும் வீரர்கள்!
ஷார்ஜா : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் மூன்று முன்னாள் வீரர்களிடம் தோல்வி அடைந்தது பெங்களூர் அணி.
பெங்களூர் அணி தூக்கி எரியும் வீரர்கள் உச்சகட்ட பார்மில் வேறு அணிக்கு ஆடி, பெங்களூர் அணியை வீழ்த்துவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த முறை மூன்று முன்னாள் வீரர்கள் ஒன்று கூடி பழிவாங்கினர்.

பஞ்சாப் வெற்றி
பெங்களூர் அணிக்கு எதிரான 31 வது லீக் போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி முதல் 7 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ள நிலையில், இந்தப் போட்டியில் அபாரமான பேட்டிங்கால் பஞ்சாப் வென்றது.

மூன்று முன்னாள் வீரர்கள்
பெங்களூர் அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை எட்ட மூன்று முன்னாள் பெங்களூர் அணி வீரர்கள் முக்கிய காரணமாக இருந்தனர். அந்த மூன்று வீரர்கள் - மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில்.

தொடர்கதை
பெங்களூர் அணி ஒவ்வொரு வருடமும் முக்கிய வீரர் யாராவது பார்ம் அவுட் ஆகி இருந்தால் அவரை அடுத்த சீசனில் அணியை விட்டு நீக்குவதும், அவர்கள் அடுத்த சீசனில் அந்த அணியை பழி வாங்குவதும் தொடர்கதையாக உள்ளது.

ரன் குவிப்பு
இந்தப் போட்டியில் மயங்க் அகர்வால் 45, கேஎல் ராகுல் 61, கிறிஸ் கெயில் 53 ரன்கள் குவித்தனர். இவர்கள் மூவரும் பெங்களூர் அணியின் முன்னாள் வீரர்கள். இதில் கிறிஸ் கெயிலை பெங்களூர் அணி நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


Click it and Unblock the Notifications