அரைசதம்
தன் முதல் போட்டியில் ஆடிய கிறிஸ் கெயில் சிறப்பாக ஆடி 53 ரன்கள் குவித்தார். ஆனால், பேட்டிங்கில் சில பந்துவீச்சாளர்களை மட்டுமே குறி வைத்து அதிரடியாக ரன் குவித்தார். மற்ற ஓவர்களில் நிதான ஆட்டம் ஆடி பந்துகளை வீணடித்தார்.
பெங்களூர் எடுத்த ஸ்கோர்
இந்தப் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 171 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கோலி மட்டுமே சிறப்பாக ஆடி 48 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் கிறிஸ் மோரிஸ் கை கொடுத்தார்.
கிறிஸ் மோரிஸ் ஆட்டம்
கிறிஸ் மோரிஸ் 8 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் மட்டும் பெங்களூர் அணி 24 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியில் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், மேக்ஸ்வெல் என அதிரடி பேட்ஸ்மேன்கள் அதிகம் இருந்ததால் 172 என்ற இலக்கு எட்டக் கூடியதாக இருந்தது.
மயங்க் அகர்வால் ரன் குவிப்பு
அடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் ஆடியது. ராகுல் நங்கூரம் போட்டு ஆடினார். மயங்க் அகர்வால் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 3 சிக்ஸ், 4 ஃபோர் அடித்து 25 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். அடுத்து கிறிஸ் கெயில் பேட்டிங் செய்ய வந்தார்.
கெயில் - ராகுல் திட்டம்
கெயில் - ராகுல் இருவரும் குறிப்பிட்ட பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் மட்டுமே அதிக பவுண்டரி அடித்து ரன்கள் எடுத்தனர். சில பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் வெறும் சிங்கிள் மட்டுமே எடுத்தனர். இப்படியே திட்டமிட்டு விக்கெட் இழக்காமல் இருவரும் 20வது ஓவரை எட்டினர்.
வெறும் 2 ரன்கள் தேவை
கடைசி ஓவரில் வெறும் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் சாஹல் வீசினார். கெயில் அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தார். அப்போதே ரசிகர்கள் பதற்றம் அடைந்தனர். ஐந்தாவது பந்தில் ராகுல் ஒரு ரன் ஓட முயன்றார்.
கெயில் ரன் அவுட்
கடினமான அந்த ரன்னை ஓட முடியாமல் கிறிஸ் கெயில் ரன் அவுட் ஆனார். அவர் 53 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி பந்தில் 1 ரன் தேவை என்ற நிலைக்கு எடுத்து வந்து விட்டார் கெயில். அதனால், மேலும் பதற்றம் அதிகரித்தது.
விமர்சனம்
கடைசி பந்தில் நிக்கோலஸ் பூரன் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. ஆனாலும், கெயில் ஏற்படுத்திய கடைசி ஓவர் பரபரப்பு தேவையில்லாத ஒன்றாக விமர்சனத்துக்கு உள்ளானது.