ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிகள்
2020 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் ஆடிய முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி இருந்தது ராஜஸ்தான் அணி. இரண்டு போட்டிகளிலும் 200 ரன்களை கடந்து ரன் குவித்து இருந்தது.
ஸ்மித், சாம்சன் ரன்கள்
கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் அந்த இரண்டு போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்து பேட்டிங்கில் அணிக்கு கை கொடுத்தனர். ஸ்மித் 69 மற்றும் 50 ரன்கள் எடுத்திருந்தார். சஞ்சு சாம்சன் 74 மற்றும் 85 ரன்கள் குவித்து இருந்தார்.
ஷார்ஜா மைதானம்
அவர்கள் இருவரும் சிக்ஸ் அடித்து அதிரடி ஆட்டம் ஆடி அதிக ரன் குவிக்க முக்கிய காரணம் ஷார்ஜா மைதானம் தான். அந்த மைதானத்தில் பவுண்டரி எல்லை சிறியது. அதனால், எளிதாக சிக்ஸ் அடித்து வந்தனர். ஆனால், அடுத்த போட்டிகளில் அவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ளவில்லை.
தோல்வி
அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக துபாயில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். சஞ்சு சாம்சன் 8 ரன்கள் எடுத்திருந்தார்.
பேட்டிங்கில் சறுக்கல்
இருவருமே முதல் இரண்டு போட்டிகள் போல நிலைத்து நின்று ஆடாமல் விரைவில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஸ்மித் துவக்க வீரராகவும், சஞ்சு சாம்சன் மூன்றாம் வரிசையிலும் ஆடி வருவதால் அவர்கள் விரைவில் ஆட்டமிழந்தால் மொத்த பேட்டிங் வரிசைக்கும் அழுத்தம் ஏற்படுகிறது.
பெங்களூர் போட்டியில் என்ன நடந்தது?
அவர்கள் மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியிலும் அதே தவறை செய்தனர். ஸ்மித் 5, சாம்சன் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. ஷார்ஜா மைதானம் போலவே கருதி ஆடி வருவதால் தான் அவர்கள் விரைவில் ஆட்டமிழப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
பென் ஸ்டோக்ஸ் இல்லை
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நட்சத்திர ஆல் - ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இல்லை. அவர் இன்னும் சில நாட்கள் கழித்தே அணியில் இணைய உள்ளார். அதிரடி துவக்க வீரர் ஜோஸ் பட்லர் இதுவரை எந்த போட்டியிலும் அணிக்கு உதவும் வகையில் ரன் குவிக்கவில்லை.
கலக்கத்தில் ராஜஸ்தான்
முக்கிய பேட்ஸ்மேன்கள் இருவர் இப்படி ஏமாற்றம் அளித்து வருவதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கலக்கத்தில் உள்ளது. ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் அடுத்த போட்டிகளிலும் ஏமாற்றினால் அந்த அணி பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.