
2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் நடைபெறாமல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, வெளி உலகத்துடன் உடல் ரீதியில் எந்த தொடர்பும் இன்றி வீரர்கள் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

மூன்று நகரங்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று நகரங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த மூன்று நகரங்கள் துபாய், அபுதாபி, ஷார்ஜா. பொதுவாகவே அமீரகத்தில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். இதற்கு முன் அங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்த போதும் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போட்டி நடக்கும் நேரம்
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் சுற்றுப் போட்டிகள் இந்திய நேரப்படி 7.30 மணிக்கு துவங்குகிறது. இரவு 11.30 மணி வரையும் போட்டிகள் நடைபெறுகின்றன. ஐக்கிய அரபு அமீராக் நேரப்படி மாலை 6 மணிக்கு போட்டிகள் துவங்குகின்றன. இதுதான் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

தொலைக்காட்சி ரசிகர்கள்
இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே போட்டிகள் அமீரகத்தில் மாலை 6 மணிக்கே துவங்குகிறது. அப்போது அங்கே வெப்பம் அதிகமாக இருக்கும். இரவு 8 மணி வரை கூட வெப்பத்தின் பாதிப்பு இருக்கும். தற்போது அதையும் தாண்டி பாதிப்பு உள்ளது.

மதியம் நடக்கும் போட்டி
மாலை போட்டிக்கே இந்த கதி என்றால் சனி, ஞாயிறுகளில் அமீரக நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்கும் முதல் போட்டி எப்படி இருக்கும்? மதிய நேரத்தில் நடத்தப்பட்ட முதல் போட்டியிலேயே இளம் வீரர் ஒருவர் சிக்கி அவதிப்பட்டார்.

தேவ்தத் அவதி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இளம் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 45 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். அவர் பாதி போட்டியில் வெப்பத்தால் அவதிப்பட்டார். உடலில் அதிக நீர் வெளியேற்றத்தால் அடிக்கடி நீர் அருந்தினார்.

தோனி, டிவில்லியர்ஸ்
கடந்த சில இரவு நேரப் போட்டிகளில் தோனி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற மூத்த வீரர்கள் கடுமையாக அவதிப்பட்டனர். அதிலும் தோனி பேட்டிங்கின் போது ஒவ்வொரு ரன் ஓடிய பின்னும் ஓய்வு எடுத்துக் கொண்டே ஆடியது கொடுமையாக இருந்தது.

கடும் பாதிப்பு
டிவில்லியர்ஸ் ஐஸ் பேக் வைத்துக் கொண்டே 20 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்ததும் மோசமானதாக இருந்தது. அதே போட்டியில் நீண்ட இன்னிங்க்ஸ் ஆடிய மும்பை வீரர் இஷான் கிஷனும் அதிக நீர் வெளியேற்றத்தால் கடைசி சில பந்துகளை சந்திக்கவே சிரமப்பட்டார்.

பிசிசிஐ பதில் சொல்லுமா?
இப்படி இளம் வீரர்கள் முதல் மூத்த வீரர்கள் வரை வெப்பத்தில் சிக்கி தங்கள் உடல்நலனை பணயம் வைத்துள்ள நிலையில், இன்னும் 45 போட்டிகளை பிசிசிஐ எப்படி நடத்தப் போகிறது? அதற்குள் பல வீரர்களின் உடல்நிலை மோசமாகும் அபாயம் உள்ளது. இதற்கு பிசிசிஐ தான் பதில் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications