
ஐபிஎல்லில் இருந்து விலகிய விவோ
இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக சீன பொருட்களுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து ஐபிஎல்லில் டைட்டில் ஸ்பான்சராக இருந்த சீன நிறுவனமான விவோ அதிலிருந்து விலகியது. பிசிசிஐயுடன் ஆண்டிற்கு 400 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், அதன் விலகலால் ஆட்டம் கண்ட பிசிசிஐ தற்போது அதில் பாதி தொகைக்கு டிரீம் 11 நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

விலகிய ஃபியூச்சர் குழுமம்
இதனால் இழப்பை சந்தித்துள்ள பிசிசிஐ ஐபிஎல்லில் அசோசியேட் ஸ்பான்சராக இரண்டு நிறுவனங்களை சேர்த்துக் கொள்ள திட்டமிட்டு ஃபியூச்சர் குழுமத்தை சேர்த்த நிலையில், ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் விளம்பரம் அளிக்க முடியாது என்று தெரிவித்து அந்த நிறுவனம் ஐபிஎல் அசோசியேட் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து விலகியுள்ளது. கொரோனாவால் நஷ்டத்தை சந்தித்துள்ள அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

பிசிசிஐ புதிய ஒப்பந்தம்
இதனிடையே, ஃபியூச்சர் குழுமத்திற்கு பதிலாக தற்போது அன்அகாடமி கல்வி நிறுவனத்துடன் பிசிசிஐ அசோசியேட் ஸ்பான்சர்ஷிப்பிற்கு 3 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மூன்று ஆண்டுகள் 120 முதல் 130 கோடி ரூபாய் வரை விளம்பரங்களை இந்த நிறுவனம் ஐபிஎல் போட்டிகளில் அளிக்கும். இதனால் பிசிசிஐயின் மிகப்பெரிய தலைவலி தற்போது தீர்ந்துள்ளது.

பேச்சுவார்த்தையில் பிசிசிஐ மும்முரம்
மேலும் இரண்டாவது அசோசியேட் ஸ்பான்சராக கிரெடிட் கார்ட் பேமெண்ட் நிறுவனமான க்ரெட்-டுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவும் முடிவாகும் நிலையில் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் குறித்த பிரச்சினைகள் பிசிசிஐக்கு தீரும். இதன்மூலம் ஐபிஎல்லில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பகுதி வருமானம் பாதிக்கப்படுமோ என்ற அணிகளின் கவலைக்கும் தீர்வு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications