
பிசிசிஐ திட்டம்
2020 ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது பிசிசிஐ. இதுவரை இல்லாத ஒரு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. பார்வையாளர்கள் கடந்த சீசனை விட 28 சதவீதம் அதிகரித்துள்ளனர். இதை வைத்து ஐபிஎல் தொடரை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த துடித்து வருகிறார் பிசிசிஐ தலைவர் கங்குலி.

புதிய அணி
அதன்படி எட்டு ஐபிஎல் அணிகளுடன் கூடுதலாக புதிய ஐபிஎல் அணி ஒன்றையும் அறிமுகம் செய்ய இருக்கிறது பிசிசிஐ. அதற்கான வேலைகளில் கங்குலி இறங்கி உள்ளார். ஒரு அணி மட்டும் தானா? இரண்டு அணியா? என்பது தான் குழப்பமே என்கிறார்கள் பிசிசிஐ வட்டாரத்தை சேர்ந்த சிலர்.

அஹமதாபாத்
அந்த புதிய அதில் ஒன்பதாவது அணி குறித்த பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன. பலரும் அஹமதாபாத்தை சேர்ந்த அணியாகவே அந்த புதிய அணி இருக்கும் என அடித்துக் கூறுகின்றனர். அப்படி என்றால் அது குஜராத் மாநிலத்தை சேர்ந்த அணியாக இருக்கும்.

மோகன் லால் விருப்பம்
இதற்கிடையே, அந்த அணியை யார் வாங்கப் போகிறார்கள் என்பது பற்றியும் செய்திகள் பரவி வருகின்றன. ஐபிஎல் இறுதிப் போட்டியை நேரில் பார்க்க வந்த மோகன் லால் புதிய ஐபிஎல் அணியை பற்றி அறியவே நேரில் சென்றார் என தகவல் வலம் வருகிறது.

கேரள அணியா?
மோகன் லால் ஐபிஎல் அணியை வாங்க ஆர்வமாக இருக்கிறார் என்றால் அது முன்பு கேரளாவை மையமாக வைத்து கொச்சி டஸ்கர்ஸ் என்ற அணி இருந்தது போல, புதிய அணி கேரளாவுக்கான அணியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

சல்மான் கான் விருப்பம்
தற்போது புதிய தகவலாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் புதிய ஐபிஎல் அணியை வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் எனும் நடிகர்கள் கிரிக்கெட் தொடரில் ஒரு அணிக்கு உரிமையாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக் கான், ப்ரீத்தி ஜிந்தா
ஏற்கனவே பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாரூக் கான், ஜுஹி சாவ்லா இணைந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நடத்தி வருகின்றனர். ப்ரீத்தி ஜிந்தா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை நடத்தி வருகிறார். அதே போல, தானும் ஒரு அணியை வாங்க வேண்டும் என சல்மான் கான் நினைக்கலாம் என்கிறார்கள்.

அதானி குழுமம்
நடிகர்களை விட பெரு நிறுவன முதலாளிகள் ஐபிஎல் அணிகளை வாங்க சத்தமே இல்லாமல் காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அஹமதாபாத்தை மையமாக ஐபிஎல் அணி உருவானால் நிச்சயம் குஜராத்தை சேர்ந்த பிரபல நிறுவனமான அதானி குழுமம் அதை வாங்கும் என்கிறார்கள்.

குஜராத் அணி வருமா?
பலரும் கூறுவதை வைத்துப் பார்த்தால் குஜராத்தை மையமாக வைத்தே புதிய ஐபிஎல் அணி உருவாகக் கூடும். குஜராத் லயன்ஸ் என்ற அணி இரு ஆண்டுகள் செயல்பட்ட போது அதற்கென்று ரசிகர்கள் கூட்டம் இருந்ததும் அதற்கு ஒரு காரணம்.


Click it and Unblock the Notifications











