சன்ரைசர்ஸ் அதிரடி வெற்றி
ஐபிஎல்லின் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், துபாயில் நடைபெற்ற நேற்றைய 22வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம்
இதன்மூலம் கடந்த 4 போட்டிகளில் 3ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்று ஐபிஎல் புள்ளிகள் பட்டியலிலும் முன்னேறியுள்ளது. அந்த அணியின் துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அதிரடியாக விளையாடி பார்ட்னர்ஷிப்பில் 160 ரன்களை குவித்தனர். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி திணறியது.
69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
அடுத்து விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 132 ரன்களிலேயே சுருண்ட நிலையில் 69 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. எஸ்ஆர்எச் அணியின் பௌலர்களும் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு இந்த சிறப்பான வெற்றியை தேடி தந்துள்ளனர்.
77 ரன்கள் அடித்த பூரன்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிகோலஸ் பூரன் மட்டுமே அந்த அணியில் சிறப்பாக விளையாடி 77 ரன்களை குவித்தார். ஆயினும் அவரது முயற்சி அணிக்கு வெற்றியை தேடித் தரவில்லை. அவரது விக்கெட்டிற்கு பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில், 132 ரன்களிலேயே அவர்கள் தங்களது ஆட்டத்தை முடித்துக் கொண்டனர்.
விளையாடியது மகிழ்ச்சி
இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் வார்னர், தானும் பேர்ஸ்டோவும் இந்த பார்ட்னர்ஷிப்பை மிகவும் என்ஜாய் செய்து விளையாடியதாக தெரிவித்துள்ளார். ஆஷஸ் தொடரில் எதிரணியில் விளையாடிய பேர்ஸ்டோவுடன் இணைந்து விளையாடியது சிறப்பானது என்றும் அவர் கூறினார்.