
சிஎஸ்கே பிளே-ஆஃப்
2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் செல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அந்த அணி இனி வரும் போட்டிகளில் ஏழில் ஐந்து அல்லது ஆறு வெற்றிகள் பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் செல்லலாம். அதற்கு எதிரணிகளை திக்குமுக்காட வைக்கும் திட்டங்களை கையில் எடுத்துள்ளார் கேப்டன் தோனி.

துவக்க வீரர் சாம் கர்ரன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சாம் கர்ரனை துவக்க வீரராக ஆட வைத்தார் தோனி. அவரும் விக்கெட் குறித்து கவலை இல்லாமல் ஆடி அதிரடியாக 21 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். வாட்சன் மூன்றாம் வரிசையில் இறங்கினார்.

வேறு ஒரு காரணம்
சாம் கர்ரன் துவக்க வீரராக ஆடினால் சிஎஸ்கே அணிக்கு பவர்பிளே ஓவர்களில் அதிக ரன் கிடைக்கும் என்பதே இதற்கு காரணம் என பலரும் நினைத்து வந்த நிலையில், இதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

பின்னணி என்ன?
ஷேன் வாட்சன் - பாப் டுபிளெசிஸ் துவக்க வீரர்களாக ஆடி ஒரு போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தனர். ஆனால், அதற்கு அடுத்த சில போட்டிகளில் இருவரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. அதனால், அவர்களில் ஒருவரை நீக்க இருக்கிறார் தோனி. அதை ஒட்டியே சாம் கர்ரனை துவக்க வீரராக இறக்கி, வாட்சன் - பாப் டுபிளெசிஸ் இருவரில் யார் சரியாக ரன் எடுக்கிறார்களோ அவரை தக்க வைத்து, மற்றவரை நீக்க தோனி முடிவு செய்தார் என கூறப்படுகிறது.

ஏன் நீக்க வேண்டும்?
வாட்சன், பாப் டுபிளெசிஸ் இருவருமே முக்கிய பேட்ஸ்மேன்கள் தான். இதே சீசனில் சில போட்டிகளில் அவர்கள் அதிக ரன்களும் குவித்துள்ளனர். அதன் பின் ஏன் அவர்களில் ஒருவரை நீக்க வேண்டும்? அதற்கு காரணம், இம்ரான் தாஹிர் இனி வரும் போட்டிகளில் ஆட வேண்டும் என தோனி நினைப்பது தான் காரணம்.

4 வெளிநாட்டு வீரர்கள்
ஒரு ஐபிஎல் அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே போட்டிகளில் ஆட முடியும். தற்போது ஷேன் வாட்சன், பாப் டுபிளெசிஸ், சாம் கர்ரன், டிவைன் பிராவோ அணியில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவரை நீக்கி விட்டுத் தான் இம்ரான் தாஹிரை ஆட வைக்க முடியும்.

சாம், பிராவோ முக்கியம்
முதல் சில போட்டிகளில் காயத்தால் அவதிப்பட்ட பிராவோவுக்கு பதில் அணியில் இடம் பெற்ற சாம் கர்ரன் மிக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். பிராவோவும் கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதனால், இவர்கள் இருவரும் முக்கியமான வீரர்கள்.

இம்ரான் தாஹிர் ஏன் அவசியம்?
இந்த நிலையில், ஷேன் வாட்சன் அல்லது பாப் டுபிளெசிஸ் இருவரில் ஒருவரை தான் நீக்கி விட்டு, தாஹிரை ஆட வைக்க முடியும். இது சிக்கலான முடிவு என்றாலும், ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாறி வருவதால் இம்ரான் தாஹிரை ஆட வைக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.

மாற்றம் இருக்கும்
அடுத்த ஒரீரு போட்டிகளில் இந்த மாற்றம் நிகழும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம். பாப் டுபிளெசிஸ் அதிக ரன்கள் குவித்து நல்ல பார்மில் இருக்கிறார். வாட்சனை விட சிறப்பாக ஆடி வருகிறார். அதனால், அவரை தக்க வைத்துக் கொண்டு, வாட்சனை தோனி நீக்கவே வாய்ப்புகள் அதிகம்.

அடுத்த போட்டி
சிஎஸ்கே அணியின் அடுத்த போட்டி வரும் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே ஆட உள்ளது. முன்னதாக லீக் சுற்றில் சிஎஸ்கே அணி டெல்லியிடம் தோல்வி அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications