
ஓய்வு முடிவு
2020 ஐபிஎல் தொடர் அவருக்கு மோசமாக அமைந்த நிலையில், அவர் ஐபிஎல் தொடரில் இருந்தும், ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற இருக்கிறார். அது பற்றி முக்கிய தகவல் ஒன்று சிஎஸ்கே வட்டாரத்தில் இருந்து வெளியாகி உள்ளது.

ஐபிஎல்-இல் ஷேன் வாட்சன்
ஐபிஎல் தொடரில் ஷேன் வாட்சன் 2008இல் இருந்தே பங்கேற்று வருகிறார். தன் முதல் சீசனில் தன் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் கோப்பை வெல்ல சிறப்பான பங்களிப்பை அளித்து இருந்தார். அதன் பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆடி, பின் சிஎஸ்கே அணியில் இணைந்தார்.

சிஎஸ்கே உடனான உறவு
சிஎஸ்கே அணியில் அவர் ஆடிய முதல் சீசனில் இறுதிப் போட்டியில் சதம் அடித்து சிஎஸ்கே அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்தார். அவர் ஆடிய அணிகளிலேயே சிஎஸ்கே அணியுடன் மட்டுமே அவர் உணர்ச்சிகரமான பிணைப்பில் இருந்தார்.

மறக்க முடியாத 2 இறுதிப் போட்டிகள்
2018 மற்றும் 2௦19 ஐபிஎல் இறுதிப் போட்டிகளை எந்த சிஎஸ்கே ரசிகராலும் மறக்க முடியாது. 2018இல் கோப்பை வென்ற நிலையில், 2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்று ஆட்டமிழந்தார்.

ரத்தம் சிந்தினார்
அந்தப் போட்டியில் அவர் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. போட்டி முடிந்த பின்னும் கூட அவர் அதை வெளியே சொல்லவில்லை. பின் ரசிகர்கள் தான் அதை கண்டறிந்து அவரது அர்ப்பணிப்பை பாராட்டினர்.

2020 ஐபிஎல் சோகம்
இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஷேன் வாட்சன் மோசமான பார்மில் இருந்தார். மேலும், சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்ததால் ஷேன் வாட்சன் கடும் விமர்சனத்தை சந்தித்தார்.

ஷேன் வாட்சன் நீக்கம்
ஒரு கட்டத்தில் அவரை அணியில் இருந்து நீக்கினார் கேப்டன் தோனி. அவருக்கு பதில் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் அணியில் இடம் பெற்றார். அவர் சிறப்பாக ஆடி தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்தார். இனி ஷேன் வாட்சனுக்கு சிஎஸ்கே அணியில் இடம் கிடைக்காது என கூறப்பட்டு வந்தது.

ஓய்வு முடிவை கூறினார்
இந்த நிலையில், ஷேன் வாட்சன் 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தன் கடைசிப் போட்டியில் ஆடி முடித்த உடன் சக வீரர்களிடம் தன் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அது பற்றிய தகவல் முதலில் வெளியாகி இருந்தது.

சொந்த நாட்டில் அறிவிப்பார்
தற்போது ஷேன் வாட்சன் தன் சொந்த நாடான ஆஸ்திரேலியா சென்ற பின் குடும்பத்தினருடன் பேசி விட்டு, ஆஸ்திரேலியாவில் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

உணர்ச்சிகரமான சம்பவம்
சிஎஸ்கே ரசிகர்கள் ஷேன் வாட்சன் ஓய்வு முடிவை அறிந்து உணர்ச்சிவசப்பட்டு வருகின்றனர். அவருக்கு வாழ்த்து கூறி, அவரது சிறப்பான தருணங்களை நினைவு கூர்ந்து அவரை பாராட்டி வருகின்றனர். அவர் 2018இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











