
இரண்டு நாடுகள்
குறிப்பாக இரண்டு நாடுகள், ஐபிஎல் தொடரை நடத்த முன் வந்த போது அதில் விமான பயணம் குறைவாக இருக்கும் நாட்டை தேர்வு செய்தார் கங்குலி. அதன் காரணமாக பிசிசிஐ பெரிய அளவில் வருமானம் ஈட்டி உள்ளது.

தள்ளி வைப்பு
2020 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் துவங்க இருந்தது. அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியதை அடுத்து அந்த தொடர் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அழைப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாடுகளில் தொடரை நடத்த வருமாறு அழைப்பு விடுத்தன. அதில் அண்டை நாடான இலங்கையை பிசிசிஐ புறக்கணித்தது.

விமான பயணம் குறைவு
இதற்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரில் சில போட்டிகள் நடந்து இருந்ததாலும், அங்கே உள்ள மூன்று மைதானங்களுக்கு பேருந்திலேயே பயணம் செய்யலாம் என்பதாலும் அந்த நாட்டை தேர்வு செய்தார் கங்குலி. விமான பயணத்தின் செலவை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது.

35 சதவீத சிக்கனம்
கொரோனா வைரஸ் பாதிப்பால் விளம்பர வருவாய் குறைந்த நிலையில், வெளிநாட்டில் நடந்தாலும் கடந்த ஆண்டை விட சிக்கனமாக தொடரை நடத்த வேண்டும் என திட்டமிட்டது பிசிசிஐ. அதன் படி பல சிக்கன நடவடிக்கைகள் செய்யப்பட்டன. அதில் விமான பயணம் இல்லாதது பெருமளவில் செலவை குறைத்தது.

ஹோட்டல் அறைகள்
அடுத்து வெளிநாட்டில் தங்கினால் ஹோட்டல் அறைகளுக்கான செலவுகள் அதிகமாக இருக்கும். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் சுற்றுலா பாதிக்கப்பட்டு இருந்ததை பயன்படுத்தி பிசிசிஐ அதிகாரிகள் முன்பே துபாய், அபுதாபியில் ஹோட்டல் அறைகளை குறைந்த விலைக்கே முன்பதிவு செய்தனர்.

அந்த தடங்கல்
2020 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இருவர் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அது மட்டும் பிசிசிஐக்கு ஏற்பட்ட ஒரே தடங்கல். ஆனால், அதை மூடி மறைத்து சமாளித்த பிசிசிஐ, அதன் பின் தொடரை சிறப்பாக நடத்தியது.

60 போட்டிகள் நடந்தன
மொத்தம் 60 போட்டிகள் எந்த சிக்கலும் இன்றி நடந்து முடிந்தது. தொடரில் எந்த தேவையற்ற சர்ச்சையும் ஏற்படவில்லை. தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கையும் எப்போதும் இல்லாத அளவு அதிகமாக இருந்தது.

30000 பரிசோதனை
மொத்தம் 1800 பேருக்கு 30,000 முறைக்கும் மேல் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதில் போட்டிகள் துவங்கிய பின் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதனால் தொடர் தடையின்றி நடந்தது.

மாபெரும் வெற்றி
2020 ஐபிஎல் இதுவரை இல்லாத அளவு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. பிசிசிஐ 4000 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. அடுத்த சீசனில் இதை விட அதிக வருமானம் ஈட்ட பிசிசிஐ முடிவு செய்து அதற்காக காய் நகர்த்தி வருகிறது.


Click it and Unblock the Notifications