ராஜஸ்தான் அணி வெற்றி
நேற்றைய ஐபிஎல்லின் 45வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 195 ரன்களை குவித்தது. ஆயினும் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்திற்கு எதிரில் அந்த ரன் ஒன்றுமில்லாமல் ஆனது.
பார்ட்னர்ஷிப்பில் 152 ரன்கள்
இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் பரபரப்பான ஆட்டத்தை தந்துள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் ஸ்டோக்ஸ் 107 ரன்களையும் சாம்சன் 54 ரன்களையும் குவித்தனர். பார்ட்னர்ஷிப்பில் இவர்களின் ரன்கள் 152ஆக இருந்தது.
பரபரப்பான பார்ட்னர்ஷிப்
இந்த வெற்றிக்காக காத்திருந்ததாகவும் தங்களின் இரண்டு அனுபவமிக்க வீரர்கள் இந்த வெற்றியை தந்துள்ளதாகவும் ஸ்மித் மேலும் கூறினார். ஸ்டோக்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தை முதல் பந்திலிருந்தே ஆடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சஞ்சு மற்றும் ஸ்டோக்ஸ் அளித்த பார்ட்னர்ஷிப் மிகவும் பரபரப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீகாந்த் பாராட்டு
இதனிடையே, ஐபிஎல் போட்டிகளிலேயே தான் கண்டுகளித்த சிறப்பான சதம் பென் ஸ்டோக்ஸ் அடித்துள்ள இந்த சதம்தான் என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறப்பான வெற்றி இது என்று கூறியுள்ளார்.