என்னங்க இதெல்லாம்.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நியாயம்.. தோனிக்கு ஒரு நியாயமா?
சென்னை : ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள 2020 ஐபிஎல் தொடருக்கு செல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது.
Recommended Video
ஆகஸ்ட் 14 அன்று தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்னை வந்து, பின் ஒரு வாரம் கழித்து ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளனர்.
இந்த நிலையில், தோனி மற்றும் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு ஈ-பாஸ், லாக்டவுன் விதிகள் எல்லாம் இல்லையா? என சாமானியர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி உள்ளனர்.

ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் துவங்கிய நிலையில், பிசிசிஐ-யும் ஐபிஎல் தொடரை நடத்த ஆயத்தமானது.

பிசிசிஐ அறிவிப்பு
டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட்டதால் அந்த கால இடைவெளியில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. செப்டம்பர் 19 முதல் நவம்பர் 1௦ வரை ஐபிஎல் தொடர் நடக்கும் என அறிவித்தது. அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல தயாராகி வருகின்றன.

சிஎஸ்கே திட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 14 அன்று அனைத்து வீரர்களையும் சென்னை வர வைக்க உள்ளது. இங்கே ஆறு நாட்களுக்கு வீரர்கள் பயிற்சி செய்ய உள்ளனர். அதன் பின் ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பிச் செல்ல உள்ளனர்.

தோனி ரசிகர்கள் உற்சாகம்
தோனி ஆகஸ்ட் 14 அன்று சென்னை வர உள்ள தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. அதைக் கண்ட தோனி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், சிலர் லாக்டவுன், ஈ-பாஸ் எல்லாம் தோனிக்கு கிடையாதா? என கேள்வி எழுப்பத் துவங்கினர்.

ஈ-பாஸ் சிக்கல்
தமிழ்நாட்டில் லாக்டவுன் விதிகள் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் தீவிரமாக அமலில் உள்ளது. அதே போல, மாவட்டம் தாண்டிச் செல்ல ஈ-பாஸ் தேவை என்ற நிலை உள்ளது. பலரும் ஈ-பாஸ் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர்.

விவாதம்
சாமானிய மக்கள் பலருக்கு ஈ-பாஸ் கிடைக்காத நிலையில் பிரபலங்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்துக்கு சென்றால் அவர்கள் ஈ-பாஸ் பெற்றார்களா? என சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பி வருகிறது. இந்த நிலையில் தான் தோனி சென்னை வரும் தகவல் வெளியானது.

விமர்சனம்
குறிப்பிட்ட விளையாட்டு பயிற்சிகளுக்கு லாக்டவுன் விதிகளின்படி அனுமதி உண்டு என கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழக அரசிடம் பயிற்சி செய்ய அனுமதி வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அனுமதி பெற்று இருந்தாலும் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர்.

டோர் டெலிவரி
தோனி மற்றும் சிஎஸ்கே வீரர்கள் பிரபலம் என்பதால் அவர்களுக்கு எளிதாக ஈ-பாஸ் கிடைத்து விடும் என்றும், விமான பயணங்களுக்கு கேள்வியே கேட்காமல் ஈ-பாஸ் அளிப்பார்கள் என சிலரும் கூறி உள்ளனர். சிலர் அவர்களுக்கு ஈ-பாஸ் "டோர் டெலிவரி" செய்யப்படும் என கிண்டல் அடித்துள்ளனர்.

ஐபிஎல் அவசியமா?
இதே போன்ற எதிர்ப்பு மனநிலை ஐபிஎல் தொடருக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பலரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் தவித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications