
கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் என்ற கொடிய பெருந்தொற்று நோய் பாதிப்பு பரவி வருகிறது. சிலர் குணமடைந்தாலும், சிலர் இந்த நோய்க்கு பலியாகி வருகின்றனர். இதற்கு இன்னமும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆள் இல்லாத மைதானம்
அந்த நோய் பாதிப்பு 120 நாடுகளுக்கும் மேல் பரவி உள்ளது. கூட்டமாக இருக்கும் இடங்களில் அசுர வேகத்தில் பரவுகிறது. அதனால், விளையாட்டுப் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பல முன்னணி கால்பந்து தொடர்கள் ஆள் இல்லாத மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

தள்ளி வைக்கப்பட்ட போட்டிகள்
உலகம் முழுவதும் பல விளையாட்டுத் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்து தொடரான என்பிஏ தள்ளி வைக்கப்படுள்ளது. அந்த தொடர் இந்தியாவின் ஐபிஎல்லுக்கு ஒப்பானது ஆகும்.

ஐபிஎல் நிலை
இந்தியாவில் பல லட்சம் மக்களை மைதானத்துக்கு ஈர்க்கும் ஐபிஎல் போட்டிகளுக்கும் கொரோனா குறித்த அச்சம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான ரசிகர்கள் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் ஐபிஎல் தொடரை நடத்தவே வேண்டாம் என கூறி வருகின்றனர்.

பெரும் நஷ்டம்
ஐபிஎல் போட்டிகள் நடத்தாமல் போனால் அதனால் இந்திய பொருளாதரத்துக்கு 1,100 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்படும். பிசிசிஐக்கு சுமார் 2,000 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், விளம்பரதாரர்கள், ஐபிஎல் அணிகள் என பலரும் பல கோடிகளை இழக்க நேரிடும்.

ரசிகர்கள் வேண்டாம்
அதனால், ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறி உள்ளார். "ஐபிஎல் போட்டிகளை நாங்கள் திட்டமிட்ட நேரத்தில் துவங்க உள்ளோம். அதாவது, ரசிகர்கள் இல்லாமல்" என அவர் கூறினார்.

அரசு முன்னெச்சரிக்கை
இந்த முடிவை பிசிசிஐ எடுத்த அதே நேரத்தில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், காலி மைதானத்தில், ரசிகர்கள் இல்லாமல் நடத்த அறிவுறுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிவியில் பார்க்கலாம்
அந்த பிசிசிஐ அதிகாரி கூறுகையில், "மருத்துவ அவசர பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல்-ஐ டிவியில் மட்டுமே பார்க்க வேண்டும். எங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாது" என்றார். ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடக்கும் போட்டியை டிவியில் பார்த்தாலும் அது சிறப்பாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வழக்கு சிக்கல்
பிசிசிஐ போட்டியை நடத்த ஆயத்தமாகி வரும் அதே வேளையில், சென்னை மற்றும் மும்பையை சேர்ந்த சிலர் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் ஐபிஎல் தொடரை இந்த ஆண்டு தடை செய்ய வேண்டும் எனக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அரசு ஒத்துழைப்பு கிடைக்குமா?
மேலும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் ஐபிஎல் தொடரை தங்கள் மாநில நகரங்களில் நடத்தக் கூடாது என இப்போதே கூறி உள்ளன. அதனால், மாநில அரசின் ஒத்துழைப்பு ஐபிஎல் தொடருக்கு கிடைக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











