ஐபிஎல் தள்ளி வைப்பு
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 29 அன்று துவங்க இருந்த ஐபிஎல், ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்படுள்ளது. அதன் பின் எப்போது துவங்கும் என்பது பற்றி இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் தாக்கம்
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், ஐபிஎல் தொடர் நடத்துவது குறித்து உறுதியான முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளது பிசிசிஐ. சில நாட்களில் இந்தியாவில் 93 பேர் வரை கொரோனா காரணமாக பாதிக்கப்படுள்ளனர்.
கிரிக்கெட் போட்டி சாத்தியம் இல்லை
உலகின் பல நாடுகளில் பல விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிரிக்கெட் போட்டிகளை ஆள் இல்லாத காலி மைதானங்களிலும் நடத்த முடியாத நிலை இருக்கிறது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடரின் முதல் போட்டி காலி மைதானத்தில் நடந்த நிலையில், மீதமுள்ள போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
கிரிக்கெட் போட்டிகள் ரத்து
இங்கிலாந்து - இலங்கை தொடர், ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர், இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் என பல கிரிக்கெட் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ளூர் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 15க்கு பின்..
ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர், அதன் பின் எப்போது தொடங்கும், எப்படி நடக்கும் என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் வீரியத்தை பொறுத்தே அதற்கு விடை கிடைக்கும்.
இந்த நாளுக்குள் துவங்க வேண்டும்
பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் கூட்டத்தில் ஐபிஎல் தொடரை எப்போது துவங்குவது என்பது குறித்து விவாதம் நடந்துள்ளது. போட்டிகள் குறைக்கப்பட்டு தொடரை நடத்துவது பற்றி பேசப்பட்டாலும், பலரும் தொடரை முழுமையாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளனர்.
45 நாட்கள் போதும்
ஐபிஎல் தொடரை முழுமையாக நடத்த குறைந்தது 45 முதல் 50 நாட்கள் வரை வேண்டும். எனவே, ஏப்ரல் 20 அன்று துவங்கினால் மே 31க்குள் போட்டியை முழுமையாக நடத்த முடியும். அதனால், பிசிசிஐ ஏப்ரல் 20க்குள் போட்டியை துவங்க வேண்டும் என முயற்சித்து வருகிறது.
கங்குலி முடிவு என்ன?
பிசிசிஐ தலைவர் கங்குலி ஐபிஎல் தொடரை எப்படியும் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஏப்ரல் 10க்குள் கொரோனா வைரஸ் பரவும் வீரியம் குறைந்தால், அப்போதே ஏப்ரல் 20 முதல் ஐபிஎல் தொடரை துவங்குவது குறித்து கங்குலி முடிவு செய்ய உள்ளார்.
ஐபிஎல் ரத்து
இந்த நிலையில், ஏப்ரல் 20 அன்று தொடரை துவங்காவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி நடந்தால் தொடரை ரத்து செய்ய பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக ஒரு பிசிசிஐ வட்டாரம் கூறியுள்ளது.