கொரோனா உறுதி
ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆல்ரவுண்டரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான டேனியல் சாம்ஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அணியில் ஏற்கெனவே தேவ்தத் படிக்கல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது டேனியல் சாம்ஸும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நிலை என்ன?
இதுகுறித்து ஆர்சிபி அணி வெளியிட்ட அறிக்கையில், டேனியல் சாம்ஸ் கடந்த 3-ம் சென்னை வந்தார். அவருக்கு அப்போது எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை எனத் தெரியவந்தது. தற்போது 2-வது பரிசோதனையில் எந்த அறிகுறிகளும் இன்றி அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டேனியல்ஸ் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த வீரர்கள்
ஐபிஎல் தொடரில் 4-வது வீரர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டெல்லி கேபிடல்ஸ் வீரர் அக்ஸர் படேல், ஆர்சிபி வீரர் தேவ்தத் பட்டிக்கல், கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் ராணா மட்டும் குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
நிம்மதியில் மும்பை
இதே போல முதல் போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில் விக்கெட் கீப்பிங் ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மற்ற வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.