
வீரர்கள் வருகை
ஐபிஎல் தொடர் நெருங்கி வருவதால் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை அணிக்குள் திரட்டி வருகிறது. அயல்நாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வருகை தந்து பயிற்சிக்கு ஆயத்தமாகி வருகின்றனர். அந்தவகையில் ஆர்.சி.பி அணி இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற முடிவுடன் களமிறங்கவுள்ளது. இந்த அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை.

ஆர்.சி.பி
பெங்களூரு அணி கடந்த மார்ச் 29ம் தேதி முதல் பயிற்சி முகாமை சென்னையில் தொடங்கியது. இந்நிலையில் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் சென்னை வந்தடைந்தார். அவர் அணியின் பபுளில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்த பிறகு அதிரடிக்கு களமிறங்கவுள்ளார். மேக்ஸ்வெல், கெயில் ஜேமிசன் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் இன்று வருகை தருவார்கள் என்றும் கேப்டன் கோலி 2ம் தேதி வருவார் என்றும் தெரிகிறது.

கோலியின் சவால்
முன்னதாக இந்தியா கிளம்புவதற்கு முன்னர் ஏ.பி.டிவில்லியர்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அதில் விராட் கோலியின் ஃபார்ம் பிடித்துள்ளது என பதிவிட்டிருந்தார். இதற்கு ரிப்ளை செய்த கோலி, டிவில்லியர்ஸ் நீங்கள் இன்னமும் ரன் எடுக்க ஓடுவதில் வேகமாக இருப்பீர்கள் என நம்புவதாக பதிவிட்டார். கோலியின் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள டிவில்லியர்ஸ், இருவரும் ரேஸ் ஓடி பார்ப்போம், தெரிந்துவிடும் என சவால் விடுத்துள்ளார். எனவே இருவரும் இந்த தொடரில் அதிரடி காட்ட இப்போதே தொடங்கிவிட்டனர்.

ஏ.பி.டி
தென்னாப்பிரிக்க வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு இந்தியாவில் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். ஐபிஎல்-ல் இதுவரை 169 போட்டிகளில் ஆடியுள்ள அவர், 4,849 ரன்களை குவித்துள்ளார். விராட் கோலியும் டிவில்லியர்ஸும் 2011ம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக சேர்ந்து ஆடுகின்றனர். அவர்களிடையே போட்டியை காண ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











