
ஏப்ரல் 9
14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் மே 30ம் தேதி நடைபெறும் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது

பயிற்சி முகாம்
ஐபில் தொடர் தொடங்குவதற்கு முன்னரே ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளன. அதன்படி சி.எஸ்.கே அணி கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னையில் பயிற்சி முகாம் நடத்தி வருகிறது. இதில் கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடு, ருத்ராஜ் கெயிக்வாட் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் பயிற்சி முகாமை மும்பைக்கு மாற்ற அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

காரணம் என்ன?
கொரோனா காரணமாக இந்த முறை மொத்தமாக 6 மைதானங்களில் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் அனைத்து அணிகளுக்கும் பொதுவான இடத்திலேயே ஆட்டங்கள் நடைபெறும். எந்தவொரு அணிக்கும் ஹோம் அட்வாண்டேஜ் கிடையாது. எனவே சென்னை அணி தனது முகாமை வரும் 26ம் தேதிக்குள் மும்பைக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. ஏனென்றால் சி.எஸ்.கே அணியின் முதல் 5 லீக் போட்டிகள் மும்பையில்தான் நடைபெறுகிறது.

ரெய்னா இல்லை
சி.எஸ்.கே அணி சென்னையில் பயிற்சியை முடித்துவிட்டு மும்பைக்கு செல்ல தயாராகி வரும் நிலையில் ரெய்னா இன்னும் அணியுடன் சேரவில்லை. முதலில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அணியுடன் சேரவில்லை எனக்கூறப்பட்டது. தற்போது அவர் மகன் பிறந்தநாளுக்காக தாமதமாவதாக கூறப்படுகிறது. எனினும் அவர் சென்னையில் தனிப்பட்ட முறையில் பயிற்சி மேற்கொண்டுள்ள வீடியோ அவ்வபோது வெளியாகியுள்ளது.

சி.எஸ்.கே விளக்கம்
இதுகுறித்து பேசியுள்ள அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், வரும் 26ம் தேதிக்குள் சி.எஸ்.கே அணி மும்பை செல்வதாகவும் அங்கு ட்ரிடண்ட் ஹோட்டலில் தங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சுரேஷ் ரெய்னா நேரடியாக 26ம் தேதி அங்கு வந்து சேர்ந்துக்கொள்ளவார் என்றும் பிசிசிஐயின் விதிப்படி ரெய்னா 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications