ஹாட் டாப்பிக்
இந்த வருட ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளாலும் அதிகம் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக் ரிஷப் பண்ட் தான். ஆஸ்திரேலியா மாற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் அவர் காட்டிய அதிரடிதான் அதற்கு காரணம். பற்றாகுறைக்கு இந்த முறை ஸ்ரேயாஷ் ஐயர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியதால் டெல்லி அணிக்கு புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக அவர் எப்படி செயல்படுவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
சவால்
டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்-க்கு முதல் போட்டியே சவால் நிறைந்த ஒன்றாக அமைந்துள்ளது. வரும் ஏப்10ம் தேதி டெல்லி தனது முதல் போட்டியாக சென்னையை எதிர்கொள்கிறது. மிகவும் அனுபவம் வாய்ந்த தோனி தலைமையிலான அணியை இளம் வீரர் ரிஷப் பண்ட் கேப்டன்சியில் டெல்லி அணி எதிர்த்து ஆடவுள்ளது. இதனால் இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தனது கேப்டன்சி திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆக்ரோஷம்
இந்நிலையில் அதற்காக ரிஷப் பண்ட் தீவிரமாக தயாராகி வரும் வீடியோ ஒன்றை டெல்லி அணி வெளியிட்டுள்ளது. அதில் ரிஷப் பண்ட், இங்கிலாந்து தொடரில் விட்ட ஆக்ரோஷத்தை அப்படியே ஐபிஎல்-க்கு எடுத்து வருவது போல அதிரடி காட்டியுள்ளார். பயிற்சியாளர் பாண்டிங்கின் ஆலோசனை மற்றும் வீரர்களின் உற்சாகத்துடன் அவர் நாளாபுறமும் பந்துகளை சிதறடித்து வருகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தோனி
முன்னதாக முதல் போட்டி குறித்து பேசிய ரிஷப் பண்ட், கேப்டனாக எனது முதல் போட்டியில் எம்.எஸ்.தோனியை எதிர்கொள்வது மிகப்பெரிய அனுபவத்தை கொடுக்கும். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். ஒரு ப்ளேயராக எனது தனிப்பட்ட அனுபவத்தையும், தோனியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்களையும் சி.எஸ்.கேவுக்கு எதிரான போட்டியில் பயன்படுத்துவேன் எனத்தெரிவித்துள்ளார்.