கட்டாய வெற்றி
14வது ஐபிஎல் தொடருக்கான காய்ச்சல் கிரிக்கெட் ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டது. போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அணி அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. குறிப்பாக முதல் சீசனில் கோப்பை வென்ற ராஜஸ்தான் அணி அதன் பிறகு ஒரு முறை கூட சாம்பியனாகவில்லை. எனவே இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என உறுதியாக உள்ளது.
கேப்டன் சாம்சன்
இதற்காக இந்த முறை அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதில் சஞ்சு சாம்சன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. 2013ம் ஆண்டு முதல் 2015வரை ராஜஸ்தான் அணிக்காக ஆடிய சஞ்சு, அணியின் 2 ஆண்டு தடைக்கு பிறகு மீண்டும் 2018 முதல் ராஜஸ்தான் அணியில் ஆடி வருகிறார். இதுவரை 107 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள இவர், 2582 ரன்களை குவித்துள்ளார். எனவே ராஜஸ்தான் அணி இந்த இளம் வீரருக்கு கீழ் இந்த முறை புதுமாற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் பதவி
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அவர், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அணியை வழிநடத்த எதிர்நோக்கியுள்ளேன். பல்வேறு சிந்தனைகள் எனக்குள் ஓடின. ஆனால் கேப்டன் பணியை மகிழ்ச்சியுடன் செய்வேன். கடந்த ஐபிஎல் சீசன் வரை என்னால் ராஜஸ்தான் அணியை வழிநடத்த முடியும் என தோன்றியதே இல்லை என தெரிவித்தார்.
தோனி
தொடர்ந்து பேசிய சாம்சன், சர்வதேச போட்டிகளில் சிறந்த கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ்.தோனியை போன்று தாம் ஆக விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். யாரும் எம்.எஸ்.தோனி போன்று ஆகிவிட முடியாது. நான் நானாக இருக்கவே விரும்புகிறேன் என தெரிவித்தார். ராஜஸ்தான் அணி வரும் ஏப்ரல் 10ஆம் தேதி தனது முதல் போட்டியாக பஞ்சாப் கிங்ஸ் அணியை மும்பையில் எதிர்கொள்கிறது