
காயம்
டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்து வந்தார். இவருக்கு கடந்த 23ம் தேதி நடைபெற்ற இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியில் இடதுகையில் பலத்த காயம் ஏற்பட்டது. தோள்பட்டை எலும்பு இடம் மாறியுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய அவர் ஐபிஎல் தொடரிலும் இருந்து விலகினார். ஏனென்றால் காயம் சரியாக 3 - 4 மாதங்கள் ஆகுமாம்.

நீடித்த குழப்பம்
ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனான பிறகு டெல்லி அணி கடந்த 2 ஆண்டுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே இந்தாண்டு அவர் இல்லாததால், அணியில் மீதம் இருக்கும், அனுபவ வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், ரவிச்சந்திரன் அஸ்வின் யாரேனும் ஒருவருக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படும் என தகவல் பரவியது. மற்றொரு புறம் இளம் வீரர் ரிஷப் பண்ட்-க்கு கொடுக்கப்படும் என கூறப்பட்டு வந்தது.

கேப்டன் யார்?
இந்நிலையில் கடந்த சில தினங்களாக நீடித்து வந்த குழப்பத்திற்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி முற்றிப்புள்ளிவைத்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனையில் அணியின் துணை கேப்டனாக இருக்கும், ரிஷப் பண்ட் அணிக்கு தலைமையேற்க முடிவானது. 23 வயதாகும் பண்ட் இங்கிலாந்து அணியில் பொறுப்புடன் செயல்பட்டார். அதே போல துணை கேப்டனாக ஸ்ரேயாஸுடன் பணியாற்றியுள்ளார்.

சவால்
அனுபவமிக்க வீரர்கள் அணியில் இருக்கும் போது இளம் வீரர் ரிஷப் பண்ட்-க்கு அணியை வழிநடத்தி செல்லும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கான சவால் முதல் போட்டியிலேயே உள்ளது. ஏனென்றால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்தாண்டு தனத முதல் போட்டியாக ஏப்.10ம் தேதி அனுபவம் நிறைந்த வீரர்கள் இருக்கும் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இளம் கேப்டன்சி மற்றும் லெஜண்ட் கேப்டன்சி மோதுவதை ரசிகர்கள் காண ஆவலுடன் உள்ளனர். இந்த போட்டி மும்பையில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











