கொரோனா போராட்டத்தில் குதித்த ரிஷப் பண்ட்.. ஒரே ஒரு ட்விட்டர் பதிவு.. ரசிகர்கள் பாராட்டு!
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் செய்துள்ள முயற்சி பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் கொரோனா நிதியுதவி வழங்குவது மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது ரிஷப் பண்ட்-ம் அதில் இணைந்துள்ளார்.

உதவி
இளம் வீரர் ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார். கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இவர் தற்போது கொரோனா நிவாரண பணிகளில் குதித்துள்ளார். இதற்காக சமூக நல அமைப்பு ஒன்றுக்கு நிதியுதவியும் செய்துள்ளார்.

பெரிய சல்யூட்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விளையாட்டில் நான் கற்றுக்கொண்ட முக்கிய விஷயம், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான். அந்தவகையில் கொரோனாவை எதிர்த்து ஓய்வின்றி உழைத்து வரும் முன்களப்பணியாளார்களுக்கு எனது சல்யூட். அதே போல கொரோனாவில் இருந்து இந்தியா மீள நமது கூட்டு முயற்சி தான் தேவை.

புது முயற்சி
அதற்காக நான் ஹெம்குண்ட் என்ற அமைப்புக்கு நிதியுதவிகள் செய்யவுள்ளேன். அந்த அமைப்பானது கிராமப்புறங்களில் ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து உதவி வருகிறது. எனவே அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முன் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பண்ட் பிரார்த்தனை
இந்த கொரோனா தாக்குதலால் பலரும் தங்களக்கு நெருக்கமான உறவுகளை இழந்து வாடி வருகின்றனர். அதனை பார்க்கும் போது என் மனம் வலிக்கிறது. உயிரிழந்த அனைவரின் ஆன்மாவும் சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் எனத்தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications