டாஸில் செய்த தவறு
ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது டாஸ் மட்டும் தான். டாஸ் வென்ற பிறகு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது மகத்தான தவறு. சஞ்ச சாம்சன், ஒரு நாள் முன்பு தான் அந்த ஆடுகளத்தில் விளையாடினார். அதுவும் இல்லாமல் இரண்டாவது பேட்டிங் செய்த அணிக்கு தான் அதிக முறை நரேந்திர மோடி மைதானத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஏன் பேட்டிங்கை சஞ்சு தேர்வு செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.
பட்லருக்கு நெருக்கடி
ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் பட்லருக்கு , குஜராத் அணியை விட சொந்த அணி வீரர்களே கூடுதல் நெருக்கடி அளித்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணி வீரர்கள் இழந்ததால், பட்லருக்கு சுதந்திரமாக ஆட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவருக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு அவரும் 35 பந்துகளில் 39 ரன்களில் ஆட்டமிழந்து விட்டார்.
ரஷித், ஹர்திக் கூட்டணி
ராஜஸ்தான் அணி வீரர்கள் பேட்டிங் செய்த போது, ரஷித் கான் ஓவரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறினார்கள். இதனால் இன்னிங்ஸ் நடுவே ராஜஸ்தான் அணியின் ரன் அடிக்கும் வேகம் கடுமையாக குறைந்தது. ரஷித் கானின் 4 ஓவரில் ராஜஸ்தான் 18 ரன்கள் மட்டுமே அடித்தது. இதே போன்று ஹர்திக்கின் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே அடித்து 3 விக்கெட்டுகளை இழந்தது.
சிங்கிள்ஸ்
ராஜஸ்தான் வீரர்கள் அடித்தால் பவுண்டரி, இல்லை என்றால் டாட் பந்து என்ற திட்டத்தில் விளையாடியது தான் மிகப் பெரிய தவறு. பந்துவீச்சாளர் நெருக்கடியை உருவாக்கினால், அதிலிருந்து விடுப்பட ராஜஸ்தான் வீரர்கள் சிங்கிள்ஸ் ஓடி இருக்க வேண்டும். ஆட்டம் தொடங்கியதில் இருந்தே 180 ரன்களை அடிக்க வேண்டும் என நினைத்து 130 ரன்களுக்குள்ளே சுருண்டு விட்டனர்.
சொதப்பிய அஸ்வின்
131 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொள்ளும் போது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்க வேண்டும். டிரெண்ட் பவுல்ட், சாஹல் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீச, அஸ்வின் மற்றும் பிரசித் கிருஷ்ணா சொதப்பினர். அதுவும் அஸ்வின் தொடர்ந்து ஒரே ஓவரில் பல வித்தியாசமான பந்தகளை வீசுகிறேன் என்ற பெயரில், ரன்களை வாரி வழங்கினார். இதனால் குஜராத் அணி வீரர்களுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படவில்லை.