
அதிரடி தொடக்கம்
கேகேஆர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் முதல் ஓவரை வீசினார். 1 ரன்னில் மாயங் அகர்வால் இருந்த போது எல்பிடபிள்யூ ஆனார். அதன் பிறகு களமிறங்கிய ராஜபக்சே அதிரடியை காட்டினார். சிக்சர், பவுண்டரி என அடித்து கொல்கத்தா வீரர்களுக்கு நெருக்கடி அளித்தார். 9 பந்தை எதிர்கொண்ட அவர் 31 ரன்கள் அடித்தார். இதில் 3 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும்.

சுருண்ட பஞ்சாப்
இருப்பினும் ராஜபக்சே 31 ரன்னில் சிவம் மவி பந்தில் ஆட்டமிழக்க, லிவிங்ஸ்டோன், ராஜ் பவா, ஷாரூக்கான் ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார். பஞ்சாப் அணி 102 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்தது. இறுதியில் ரபாடா மட்டும் 25 ரன்கள் எடுக்க, பஞ்சாப் அணி 10 பந்துகள் எஞசிய நிலையில் 137 ரன்களுக்கு சுருண்டது. கொல்கத்தா அணியின் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இதன் மூலம் பர்பிள் கேப்பை உமேஷ் யாதவ் பெற்றார்.

சொதப்பிய தொடக்கம்
இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்கமும் மோசமாகவே அமைந்தது. வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹானே 12 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பில்லிங்ஸ் ஜோடி பொறுமையாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. எனினும் ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களிலும், நிதிஷ் ராணா டக் அவுட்டாகியும் வெளியேறினர்.

ரஸில் சூறாவளி
இதனால் பஞ்சாப் அணி மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தது. ஆனால் களத்துக்கு வந்த ஆண்டிரு ரஸில் தொடக்கம் முதலே ருத்ரதாண்டவம் ஆடி ரன்களை விளாசினார் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தூங்கா இரவுகளை ரஸில் பரிசு அளிக்க, ஓடியன் ஸ்மித் அணியின் ஒரு ஓவரில் மட்டும் கொல்கத்தா அணி வீரர்கள் 30 ரன்கள் அடித்தனர். 8 இமாலய சிக்சர்களை விளாசிய ரஸில் 31 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். இதன் மூலம் கொல்கத்தா அணி 14.3வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.


Click it and Unblock the Notifications











