மும்பை: ஐபிஎல் 15வது சீசனுக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மெக்குல்லம் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெக்குல்லம் கடந்த சில ஆண்டுகளாக கேகேஆர் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார்,
மெக்குல்லம் வழிக்காட்டுதலில் கேகேஆர் அணி கடந்த முறை இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியை தழுவியது.
இந்த நிலையில், புத்தம் புதிய கேப்டன் , புதிய வீரர்கள் உள்ளடக்கிய அணியை மெக்குல்லம் வழிநடத்தினார். இதற்கு நல்ல பலனாக, முதல் 4 போட்டியில் மூன்றில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, பிறகு தொடர்ந்து 5 போட்டியில் தோல்வியை தழுவியது. கொல்கத்தா அணியின் தோல்விக்கு அணியில் நடைபெறும் அதிரடி மாற்றங்கள் தான் காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

கிட்டத்தட்ட அணியில் இருந்த 20 பேரும் நடப்பு சீசனில் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். நன்றாக விளையாடிய டிம் சௌதியை நீக்கி, பாட் கம்மின்ஸ்க்கு வாய்ப்பு வழங்கியது. பின்னர் அவரை நீக்கியது. வெங்கடேஷ் ஐயரின் பேட்டிங் வரிசையை மாற்றியது. பிறகு அவரை அணியை விட்டு நீக்கியது என பல மாற்றங்கள் நிகழ்ந்தது,
மேலும் பேட்டிங் வரிசையை தன் அனுமதி இல்லாமல் மாற்றியது குறித்து வெளிப்படையாகவே பயிற்சியாளர் மெக்குல்லமிடம் ஸ்ரேயாஸ் ஐயர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அணி தேர்வில் சி.இ.ஓ. தலையிடுவதாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் போட்டு கொடுத்தார். இதனால் கடும் விரக்தி அடைந்துள்ள மெக்குல்லம், பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளார்.
இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. அந்த பொறுப்புக்கு மெக்குல்லமின் பெயர் தான் முதலிடத்தில் பரிசீலினையில் உள்ளது. ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக மெக்குல்லம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் என்ற கவுரமான பொறுப்புக்காக தான் மெக்குல்லம் விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.