“உங்களுக்கு பிடிக்காம போகலாம்.. ஆனா அதுதான் சரி” பவுலர்களுக்கு தோனி முக்கிய அட்வைஸ்..வெற்றிக்கான வழி
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்களுக்கு கேப்டன் தோனி மிக முக்கியமான அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணி அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளது.
கேப்டனாக தோனி பதவியேற்ற முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றுள்ளதால் ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.

சிஎஸ்கே கம்பேக்
முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 202/2 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 186 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதில் ஒருபுறம் ருதுராஜ் கெயிக்வாட் 99 ரன்கள் அடித்திருந்த போதும், பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். எனினும் 46 ரன்கள் கசிந்திருந்தது.

தோனி அட்வைஸ்
இந்நிலையில் பவுலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என தோனி ஒரு அட்வைஸ் கூறியுள்ளார். அதில், நாம் 200 ரன்கள் இலக்கு வைத்தால், எதிரணி 19 ஓவர்களில் 175 - 180 ரன்கள் வரை அடிப்பார்கள். இதுபோன்ற சமயத்தில் பவுலர்கள் சற்று வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். உங்கள் ஓவரில் 4 சிக்ஸர்கள் கூட செல்லலாம். ஆனால் அந்த கடைசி 2 பந்துகள் ஆட்டத்தையே வென்றுக்கொடுக்கும். எனவே பவுலர்கள் அதனை சரியாக முடித்துவிட வேண்டும்.

பவுலர்கள் செய்யும் தவறு
நிறைய பவுலர்கள் தங்களது கடைசி ஓவரில் 3 - 4 சிக்ஸர்கள் சென்றுவிட்டால், அடுத்த 2 பந்துகளில் மனமுடைந்து விடுகின்றனர். எப்படியாவது முடித்துவிட வேண்டும் அல்லது விக்கெட் எடுக்க வேண்டும் என ரிஸ்க் எடுக்க தோன்றும். ஆனால் அந்த இரு பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரிக்கு பதிலாக 2 பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தால் கூட ஆட்டமே மாறிவிடும்.

பவுலர்களுக்கு பிடிக்குமா?
எனது இந்த கருத்து பவுலர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இது நிறைய சமயங்களில் எனக்கு உதவி இருக்கிறது. சிஎஸ்கே பவுலர்களுக்கும் நான் அடிக்கடி இதையே தான் கூறுவேன். எனவே அதிக ஸ்கோர் இருக்கக்கூடிய போட்டிகளில் இதனை பயன்படுத்தலாம் என தோனி அட்வைஸ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications