
ரசிகர்கள் கோபம்
அடிப்படை தொகை ரு. 2 கோடிக்கு பதிவு செய்திருந்த சுரேஷ் ரெய்னா மீது எந்தவொரு அணியும் ஆர்வம் காட்டவில்லை. முதலில் ஏலம் விட்ட போது சிஎஸ்கே அணிக்கூட கையை தூக்கவே இல்லை. அடிப்படை தொகைக்கு எடுப்பதற்காக பின்னர் கேட்கப்படுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவரின் பெயரை மீண்டும் கேட்கக்கூட சென்னை அணி நிர்வாகம் விரும்பவில்லை. இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சிஎஸ்கே விளக்கம்
இந்நிலையில் ரெய்னாவை ஏன் எடுக்கவில்லை என சிஎஸ்கே அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். சிஎஸ்கேவுக்காக கடந்த 12 ஆண்டுகளாக சிறந்த பங்களிப்பை கொடுத்து வந்தவர் ரெய்னா. அவர் இல்லாமல் விளையாடுவது எங்களுக்கும் மிகவும் கடினமான விஷயம் தான். ஆனால் மற்றொரு முக்கியமான விஷயத்தையும் ரசிகர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இனி பொருந்தமாட்டார்
ஒவ்வொரு நிர்வாகமும் தங்களது அணிக்குள் சிறந்த ஃபார்மில் இருக்கும் வீரரையே எடுக்க முயலும். ஆனால் ரெய்னாவின் ஃபார்ம் சரியில்லாதது தான் நாங்கள் அவரை ஏலம் எடுக்காததற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று. தற்போதைய அணிக்கு அவர் பொருந்தமாட்டார்.

அதற்கான நேரம் இது
இது ஒட்டுமொத்த அணியையும் மாற்றுவதற்கான நேரம். அணியில் வாய்ப்பு பெறும் சில இளம் வீரர்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார்களாக விளங்குவார்கள். அதற்கான பொருத்தங்கள் தான் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த சீசனுக்கு வாழ்த்துக்கள் கூறிக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

ஸ்கோர் விவரம்
ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய சாதனைகளை புரிந்தவர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்தவர் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். இதுவரை 204 போட்டிகளில் விளையாடி 5,528 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு முன்னர் விராட் கோலி (6,283), ஷிகர் தவான் (5,784), ரோகித் சர்மா (5,611) ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications