சிஎஸ்கே- க்கு வரும் 3 தமிழக வீரர்கள்.. தோனியின் விருப்பத்தால் எடுக்கப்படும் முடிவு.. ரசிகர்கள் குஷி!
சென்னை: ஐபிஎல் மெகா ஏலத்தின் போது 3 முக்கிய வீரர்களை தட்டித் தூக்க தோனி தலைமையிலான சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது.
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் ஜனவரி 2வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி அனைத்து அணிகளும், தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.

சிஎஸ்கே முடிவு
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதன்மை தேர்வாக ரவீந்திர ஜடேஜாவும் அவருக்கு அடுத்தபடியாக எம்.எஸ்.தோனி தக்கவைக்கப்பட்டனர். 3வது மற்றும் 4வது தேர்வாக ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் மொயீன் அலி ஆகியோர் அணிக்குள் தக்கவைக்கப்பட்டனர். இந்நிலையில் மெகா ஏலத்தின் போது அந்த அணி 3 முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

முதன்மை தேர்வு
சென்னை அணிக்கு தற்போது நல்ல தொடக்க ஆட்டக்காரர் தேவைப்படுகிறார். டூப்ளசிஸை மீண்டும் ஏலத்தில் எடுக்க வேண்டும் என்றால் அதிக தொகை செலவாகும். எனவே அவருக்கு மாற்றாக இந்திய வீரர் ஷிகர் தவானை ஏலம் எடுக்க திட்டமிட்டுள்ளது. டெல்லி அணிக்காக அதிரடி தொடக்கத்தை கொடுத்து வந்த தவான் இந்தாண்டு கழட்டிவிடப்பட்டார். மேலும், அவர் தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருப்பதால் ஏலத்தில் அவரை வாங்க போட்டி குறைவாக தான் இருக்கும்.

சீனியர் ஸ்பின்னர்
அடுத்ததாக மற்றொரு தமிழக வீரர் ரவி அஸ்வினை சிஎஸ்கே ஏலம் எடுக்கலாம். இவர் 2009 முதல் 2015 வரை 97 போட்டிகளில் சிஎஸ்கேவுகாக விளையாடியுள்ளார். அதில் 90 விக்கெட்களையும் கைப்பற்றினார். சமீபத்தில் இந்திய டி20 அணியில் இணைந்த அவர் விக்கெட் மழை பொழிந்து வருகிறார். இதனால் அவரை மடக்க சிஎஸ்கே நிச்சயம் முயலும் எனத்தெரிகிறது.

அடுத்த ஃபினிஷர் யார்?
இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கானை ஏலம் எடுக்க சிஎஸ்கே குறிவைத்துள்ளது. சென்னை அணிக்கு தோனியை போன்று நல்ல ஃபினிஷர் தேவைப்படுகிறார். அதற்கேற்றார் போல தான் ஷாருக்கானின் ஆட்டங்கள் அமைந்திருந்தன. சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் அவரின் அதிரடியால் தான் தமிழக அணி கோப்பை வென்றது. இதனை தோனி நேரலையில் பார்த்தார். இதே போல விஜய் ஹசாரே தொடரிலும் சிறப்பாக விளையாடியுள்ளதால், அவரை தோனி நன்கு கவனித்து வருவதாக தெரிகிறது.

இவர் தான் கடைசி பேட்ஸ்மேன்
இவருக்கு அடுத்தபடியாக தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தரை வாங்கிவிட வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர் பவர் ப்ளே ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்யக்கூடியவர். இதே போல இவரை அணிக்குள் சேர்த்தால் சிஎஸ்கேவின் பேட்டிங் ஆழம் மிக நீண்டதாக இருக்கும். இந்த காரணங்களுக்காக சுந்தரை சிஎஸ்கே எடுக்கலாம். இதுமட்டுமல்லாமல் இவர்களின் ஏலத்தொகை குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications