புனே: ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே, ஐதராபாத் அணி மோதின. இந்த ஆட்டத்தில் பல மாதங்களுக்கு பிறகு தோனி கேப்டனாக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், போட்டி முடிந்ததும் தோனிக்கு ஸ்டெயின் செய்த காரியம், ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பாபா படத்தில் கோயிலுக்கே செல்லாத ரஜினிக்கு யானை ஆசீர்வாதம் செய்யும் போது ஒரு வசனம் வரும் அல்லவா, பாபாக்கு மட்டும் தான் எல்லாம் மரியாதையும் தேடி போகும் என்று..
அதே போன்ற ஒரு மரியாதை தான் நேற்று தோனிக்கு கிடைத்தது. ஐதராபாத் அணியின் பந்துவீச்சுக்கான பயிற்சியாளராக ஸ்டெயின் விளங்குகிறார். ஸ்டெயினின் வருகைக்கு பிறகு புவனேஸ்வர் குமார், உம்ரான மாலிக், நடராஜன், யான்சென் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வந்தனர்.
ஆனால் இத்தகைய பந்துவீச்சையே சிஎஸ்கே அணி பீஸ் பீசாக ஆக்கியது. இதனையடுத்து போட்டி முடிந்ததும் ஸ்டெயின் தன்னுடைய பழைய ஜெர்சியை தோனியிடம் கொண்டு சென்று ஆட்டோகிராப் கேட்டார். இதற்கு தோனியும் நெகிழ்ச்சியுடன் கையெழுத்து போட்டார்.
மார்டன் கிரிக்கெட்டில் உலகின் தலைச் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கியவர் ஸ்டெயின். முழு உடல் தகுதியுடன் இருந்த போது ஐபிஎல் தொடரிலும் கலக்கியவர். ஆனால் அப்படி பட்ட ஸ்டெயினே தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.