
பரபரப்பு கட்டம்
இந்த போட்டியில் கடைசி ஓவர் தான் திருப்புமுனையாக இருந்தது. குஜராத் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. விருதிமான் சாஹா 55 ரன்களும், சுப்மன் கில் 52 ரன்களும் எடுத்தனர். ஆனால் அதன் பின்னர் வந்தவர்கள் சோபிக்கவில்லை. கேப்டன் பாண்ட்யா 24 ரன்கள் சாய் சுதர்சன் 14 ரன்கள், ராகுல் தேவட்டியா 3 ரன்களுக்கும் அடுத்தடுத்து நடையை கட்டினர்.

கடைசி ஓவர் த்ரில்
இதனால் கடைசி ஓவரில் அந்த அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் மில்லர் மற்றும் ரஷித் கான் இருந்தனர். டேனியல் சாம்ஸ் பவுலிங் வீசினார். எப்படியும் குஜராத் தான் வெல்லும் என எதிர்பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்து சிங்கிளாக அடிக்க, 2வது பந்து டாட் ஆனது. பிறகு 3வது பந்தில் விக்கெட் பறிபோனது.

கடைசி பந்தில் 6 ரன்கள்
அடுத்த 3 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அனைவருக்கும் பதற்றம். ஆனால் அந்த 3 பந்துகளில் 1, 0 என வந்ததால் கடைசி ஒரு பந்தில் சிக்ஸர் தேவைப்பட்டது. ஆனால் அந்த பந்தும் டாட் பாலாக செல்ல, மும்பை அணி அபார வெற்றி பெற்றது. ரசிகர்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

சிஎஸ்கேவின் அதே சம்பவம்
இதே போன்ற வெற்றியை மும்பை அணி இதற்கு முன்பும் பெற்றுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதிப்போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மலிங்கா வீச, சிஎஸ்கேவால் 6 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை சாம்பியன் பட்டம் வென்றது.

டேனியலின் விளக்கம்
இதுகுறித்து பேசிய டேனியல் சாம்ஸ், கடைசி ஓவரில் என் மனதில் இருந்தது ஒன்றே ஒன்று தான். அது இழப்பதற்கு என்னிடம் இனி எதுவும் இல்லை என்பது தான். பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக களம் இருந்தது. இதனால் இந்த முறை வைட் லைனுக்கு உள்ளே தான் பந்துவீச வேண்டும் என தெளிவாக இருந்தேன். ஸ்லோவர் பால் தான் உதவும் என நினைத்தேன். அதற்கு பலன் கிடைத்துவிட்டது. மும்பை அணிக்கு தற்போது மினி ஐபிஎல் நடக்கிறது போன்று நினைக்கிறோம். மீதமுள்ள அனைத்திலும் வெற்றி பெறுவோம்.


Click it and Unblock the Notifications