
நோ பால் பிரச்சினை
223 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கடைசி 6 பந்துகளில் 36 ரன்கள் தேவை. அப்போது முதல் 2 பந்துகளில் ரோவ்மென் போவெல் சிக்ஸர் அடித்துவிட்டார். ஃபுல்டாசாக போடப்பட்ட 3வது பந்தையும் சிக்ஸருக்கு அடித்தார். ஆனால் அதற்கு அம்பயர் நோ பால் சிக்னல் கொடுக்கவில்லை. அது சரியானது தான் என உறுதியாக இருந்தனர்.

ரிஷப் பண்ட் ஆத்திரம்
இதனால் ஆத்திரமடைந்த ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் டக் அவுட்டில் இருந்து கத்தினர். ரிஷப் பண்ட் வீரர்களை விளையாட வேண்டாம், வந்துவிடுங்கள் என கூறினார். துணை பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே நேராக களத்திற்குள் சென்று அம்பயர் நிதின் மேனனிடம் சண்டையிட்டார். இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

கைவிரித்த நிர்வாகம்
இந்நிலையில் இந்த விவகாரத்தில் டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் கூறிய கருத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், நேற்று நடந்த சம்பவம் மன வருத்தத்தை கொடுக்கிறது. ஆனால் ரிஷப் பண்ட் மற்றும் பிரவீன் ஆம்ரே ஆகியோருடன் டெல்லி அணி நிர்வாகம் துணை நிற்காது. அவர்கள் செய்தது தவறு தான்.

அம்பயர்கள் செயல்
சரியோ, தவறோ, அம்பயர்கள் சொல்வது தான் கடைசி முடிவு. நாம் அதனை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அதற்காக திடீரென களத்திற்குள் நுழைந்து வாக்குவாதம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது சரியும் இல்லை. அப்போது இருந்த கோபத்தில் பல விஷயங்கள் அரங்கேறிவிட்டன. ஆனால் அவை சரியென டெல்லி நிர்வாகம் கூறாது என வாட்சன் கூறியுள்ளார்.

பங்கேற்க தடை
இது ஒருபுறம் இருக்க, மோசமான செயல்பாடுகள் காரணமாக பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு போட்டி ஊதியம் முழுவதையும், ஷர்துல் தாக்கூருக்கு போட்டி ஊதியத்தில் 50% சதவீதத்தையும் அபராதமாக விதித்துள்ளது. பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவுக்கு போட்டி ஊதியத்தில் 100% அபராதம் மற்றும் ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











