ஐபிஎல்- டெல்லி அணி பேருந்து மீது தாக்குதல்.. மும்பையில் பரபரப்பு.. மர்ம நபர்கள் குறித்து விசாரணை
மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக மும்பை அணி வந்துள்ள டெல்லி அணி வீரர்களின் பேருந்து மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வரும் 26ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனேவில் நடைபெறுகிறது.
ஆனால் இது தற்போது புது பிரச்சினைக்கு வழி வகுத்துள்ளது, 10 அணிகளும் ஒரே இடத்தில் இருப்பதால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

ஆலோசனை
இதனையடுத்து மகாராஷ்டிரா போலீசாருடன் பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதில் வீரர்களுக்கு எவ்வித பாதுகாப்பு வழங்குவது, வீரர்கள் தங்கும் இடத்திலிருந்து ஹோட்டலுக்கு எப்படி அழைத்து வருவது, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் எப்படி தடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தாக்குதல்
இந்த நிலையில் மும்பை வந்துள்ள டெல்லி அணி கேபிடல்ஸ் அணி வீரர்களின் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார், அடையாளம் தெரியாத 5 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு
அதிர்ஷ்டவசமாக பேருந்தில் வீரர்கள் உள்ளிட்ட யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பை அதிகப்படுத்த போலீசார் முடிவு எடுத்துள்ளனர். வீரர்கள் பேருந்தில் வரும் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன், கான்வேவில் வர திட்டமிட்டுள்ளனர். இதனால் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
அச்சம் இல்லை
இதனிடையே, ரிக்கி பாண்டிங், வாட்சன் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் மும்பைக்கு வந்துள்ளனர். தற்போது ஹோட்டலில் 3 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டு, பிறகு பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இதுவரை எந்த வீரர்களும் பாதுகாப்பு குறைபாடு குறித்து எவ்வித புகாரும், அச்சமும் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications