என் திறமைக்கு நியாயம் பண்ணல.. தினேஷ் கார்த்திக் உருக்கமான பேச்சு..அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன?
மும்பை: ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் தினேஷ் கார்த்திக் தனது அதிரடி பேட்டிங் பின்னணி குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
நடப்பு சீசனின் முதல் போட்டியில் 14 பந்துக்கு 32 ரன்கள் விளாசிய தினேஷ் கார்த்திக், 2வது ஆட்டத்தில் 7 பந்துக்கு 14 ரன்கள் அடித்தார்.
நேற்று பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியிடம் பெங்களூரு அணி 87 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.

மன வேதனை
அப்போது களத்திற்கு வந்த கார்த்திக், 23 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். நடப்பு ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக்கின் ஸ்ட்ரைக் ரேட் 204.5 ஆக உள்ளது. இந்த நிலையில், தனது அதிரடி பேட்டிங் குறித்து தினேஷ் கார்த்திக் மனம் திறந்துள்ளார். அதில் கடந்த முறை என் திறமைக்கு நானே நியாயம் செய்யவில்லை. அது எனக்கு மன வேதனையை தந்தது.

தனித்துவமான பயிற்சி
இதனால், ஐபிஎல் சீசனுக்கு முன் தனித்துவமான பயிற்சியில் ஈடுபட்டேன். பயிற்சியின் போதே மனதுக்குள் போட்டிக்கான சூழலை செயற்கையாக உருவாக்கிவிட்டு, பின்னர் அதற்கு ஏற்றார் போல் பயிற்சி செய்தேன். இது நல்ல பலனை தந்துள்ளது. எனக்குள் இருக்கும் கிரிக்கெட் இன்னும் முடியவில்லை என்று எனக்கு நானே சொல்லி கொள்வேன்.

குறிக்கோள்
எனக்கு ஒரு குறிக்கோள் உள்ளது. அதற்காக உழைத்து வருகிறேன். டி20 கிரிக்கெட்டில் நெருக்கடியான சூழலில், முதலில் நாம் அமைதியாக இருந்து, நமது ஆட்டத்தை நம்ப வேண்டும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய ஆர்சிபி கேப்டன் டுபிளஸிஸ், என்னை பொறுத்தவரை தோனி சிறந்த ஃபினிஷர், அதற்கு பிறகு தினேஷ் கார்த்திக் தான் அப்படி கூலாக விளையாடுகிறார்.

கேப்டன் பாராட்டு
தினேஷ் கார்த்திக் போன்ற நபர் அணியில் இருக்கும் போது மற்றவர்கள் சுதந்திரமாக விளையாடலாம். ஹர்சல் பட்டேலும் நன்றாக விளையாடினார். நாங்கள் 19வது வரை பந்துவீச்சில் சிறப்பாக தான் செயல்பட்டோம். ஆர்சிபி தனது அடுத்த போட்டியில் மும்பையை சனிக்கிழமை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications