
முதல் ஏலமே ஷாக்
நேற்று முதல் பகுதி ஏலத்தில் பொறுமை காத்த மும்பை அணி, திடீரென தனது முதல் ஏலத்திலேயே இஷான் கிஷானை ரூ.15.25 கோடிக்கு வாங்கி அதிர்ச்சி கொடுத்தது. மும்பை அணி ஏலத்தில் செலவிட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இனியாவது தொடர்ந்து வீரர்களை வாங்கும் என எதிர்பார்த்த நிலையில் பணத்தை செலவிட முன்வரவே இல்லை.

கோபத்தில் ரசிகர்கள்
இதன் பின்னர் நீண்ட நேரம் கழித்து அந்த அணி பேபி ஏபிடிவில்லியர்ஸ் என்றழைக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் U19 வீரர் டேவல்ட் ப்ரேவிஸை ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது. தொடர்ந்து பாசில் தம்பியை ரூ.30 லட்சத்திற்கும், முருகன் அஸ்வினை ரூ.1.6 கோடிக்கும் ஏலம் எடுத்தது. இந்த 4 வீரர்களை மட்டுமே முதல் நாள் முடிவில் மும்பை ஏலம் எடுத்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இருப்பதிலேயே மிகக்குறைந்த அளவிலான வீரர்களை ஏலம் எடுத்த அணியாக உள்ளது.

கடும் சிக்கல்
முதல் நாளின் போது தான் பல முன்னணி வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள். 2வது நாளில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள் மற்றும் U19 வீரர்கள் மட்டுமே ஏலம் விடப்படுவார்கள். இதனால் கையில் ரூ.27 கோடியே 85 லட்சம் மீதம் வைத்துள்ள போதும் மும்பை அணிக்கு பெரும்பாலும் புதுமுக வீரர்களே கிடைப்பார்கள். இது அந்த அணிக்கு ப்ளேயிங் 11ல் பெரும் பாதிப்பை உண்டாக்கக்கூடும்.

தப்பிக்க ஒரே ஒரு வழி
இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்க மும்பை அணிக்கு ஒரே வழி தான் உண்டு. சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஏலம் போகாத பல முன்னணி வீரர்கள் இன்று கடைசியில் ஏலம் விடப்படுவார்கள். அவர்களில் இருந்து சிறந்த வீரர்களை குறைந்த தொகையில் எடுத்துக்கொண்டால் மும்பை அணிக்கு பணமும் மிஞ்சும். இதுதான் அவர்களின் திட்டமாக கூட இருக்கலாம்.


Click it and Unblock the Notifications