அதிர்ந்த அகமதாபாத் நகரம்.. குஜராத் டைட்டனிஸ் வெற்றி கொண்டாட்டம்.. ட்விட்டரில் உருக்கமான பதிவு!
அகமதாபாத்: அகமதாபாத் நகரமே அதிரும் அளவிற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றியை கொண்டாடியுள்ளனர்.
கடந்த 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 15வது சீசன் கடந்த மே 29ம் தேதி முடிவடைந்தது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது.

குஜராத் அணி வெற்றி
ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் அணிக்கு பின்னர், தனது அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்ற அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் அகமதாபாத் மைதானத்தில் சுமார் 1 லட்சத்து 5 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மத்தியில் வெற்றியை பதிவு செய்து அசத்தியிருந்தது.

வெற்றி கொண்டாட்டங்கள்
இந்நிலையில் தனது வெற்றியை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். திறந்தவெளி பேருந்தில் அகமதாபாத் நகரை கோப்பையுடன் வலம் வந்த குஜராத் அணி வீரர்கள், வழி முழுவதும் நின்றிருந்த ரசிகர்களுக்கு உற்சாக குரல் எழுப்பி நன்றி தெரிவித்தனர். ரசிகர்களும் நகரே அதிரும் அளவிற்கு கூச்சலிட்டு வரவேற்பு கொடுத்தனர்.

முதல்வர் வாழ்த்து
தொடர்ந்து ஊர்வலமாக சென்ற வீரர்கள், குஜராத் மாநில முதல்வர் பூபேந்திரபாய் படேலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் அவரின் கையில் இருந்து கோப்பையை பெற்று பெருமைப்பட்டனர். தொடர்ந்து இதே போன்று கோப்பை பெற வேண்டும் என வாழ்த்துக்கூறி அனுப்பி வைத்தார்.

நெகிழ்ச்சி பதிவு
இதுகுறித்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ள குஜராத் அணி நிர்வாகம், இந்த சீசனில் ரசிகர்களாக நீங்கள் இல்லையென்றால் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது. சாலைகளில் எங்களுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்கிய போலீசாருக்கு எத்தனை நன்றிகள் கூறுவது என்றே தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications