சஞ்சு சாம்சனின் நம்பிக்கை
அகமதாபாத் பிட்ச்- 2வது பேட்டிங்கிற்கு தான் சாதகம் என்று தெரிந்தும் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தது, ஜாஸ் பட்லர் மீதான் அதீத நம்பிக்கையால் தான். முதல் இன்னிங்ஸில் அவரை எந்த அணியாலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நேற்றைய போட்டியில் மட்டும் பட்லர் எப்படி குஜராத் அணியிடம் சரணடைந்தார் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது. 35 பந்துகளில் 39 ரன்களை அடித்து அவுட்டானார்.
பாண்ட்யாவின் ப்ளான்
இந்நிலையில் பட்லரை சிம்பிள் ஸ்கெட்ச் மூலம் பாண்ட்யா தூக்கியது தெரியவந்துள்ளது. அனைத்து போட்டிகளிலும் ஜாஸ் பட்லர் முதல் சில ஓவர்கள் நிதானமாக தான் விளையாடுவார். பெரிய அதிரடிகள் இருந்ததில்லை. இதற்கு காரணம் முன்னணி பவுலர்கள் வீசுவார்கள் என்பதுதான். அனுபவ பவுலர்களுக்கு பட்லரின் வீக்னஸ் தெரியும். முதல் சில ஓவர்களில் நல்ல ஸ்விங் இருப்பதால், அனுபவ பவுலர்கள் அவரை சாய்த்து விடுவார்கள். எனவே மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் மற்றும் இளம் பவுலர்களை தான் குறிவைத்து பட்லர் அதிரடி காட்டுவார்.
ஜாஸ் பட்லரின் தந்திரம்
இளம் வீரர்களுக்கு ஜாஸ் பட்லரை கையாளும் சரியான லைன் தெரியாது.எனவே இதனை பயன்படுத்தி அவர்களை குழப்பி சிக்ஸர் மழை பொழிந்தார். ஆனால் இந்த விஷயத்தை ஹர்திக் பாண்ட்யாவும் நன்கு தெரிந்துவைத்துள்ளார். இதனால் தான் நேற்றைய போட்டியில் பட்லரை வீழ்த்தும் வரை எந்தவொரு புதுமுக வீரர்களும் பவுலிங்கிற்கு கொண்டு வரப்படவே இல்லை.
எதிர்பார்க்காத ட்விஸ்ட்
வழக்கமாக ஆட்டத்தின் 8வது ஓவரில் சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர் தான் பவுலிங்கிற்கு வருவார். ஆனால் அவரின் பந்தை பட்லர் துவம்சம் செய்துவிடுவார் என்பதால் அவருக்கு வாய்ப்பு தரவில்லை. மாறாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ரஷித் கான், முகமது ஷமி, லாக்கி ஃபெர்க்யூசன் என 4 முன்னணி பவுலர்கள் மாறி மாறி ஓவர்கள் வீசி பட்லருக்கு அச்சுறுத்தல் தந்தனர்.
Recommended Video
அதிகப்படியான அழுத்தம்
ஹர்திக் பாண்ட்யா நினைத்ததை போன்றே பட்லர் ரன் அடிக்க முடியாமல் சிக்கி தவித்தார். ஒருபுறம் விக்கெட்கள் சரிகிறது. மற்றொரு புறம் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக உள்ளது என்ற அழுத்தத்தால் ஜாஸ் பட்லர் தவறான ஷாட் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார். பட்லர் மற்றும் ஹெட்மெயர் அவுட்டான பிறகு 16வது ஓவரில் சாய் கிஷோருக்கு வாய்ப்பை தந்தார். பாண்ட்யா எடுத்த இந்த முடிவே ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை கொடுத்தது.