சிஎஸ்கே இப்படியெல்லாம் செய்கிறதா? மெகா ஏலத்திலேயே நடந்த தவறு.. ஜடேஜா-க்காக முன்னாள் வீரர் அதிருப்தி
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜா விஷயத்தில் எடுத்த நடவடிக்கைக்கு முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் தோனியே பதவியேற்றுக்கொண்டார்.
இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி தேவை என்ற சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ஐதராபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியையும் பெற்றது.

கேப்டன்சி மாற்றம்
கேப்டன்சி மாற்றம் குறித்து பேசியிருந்த தோனி, கடந்த வருடமே ஜடேஜாவுக்கு கேப்டன்சி குறித்து தெரியும். அதற்காக தயாராக நிறைய காலம் இருந்தது. ஆனால் அவரால் ஆல்ரவுண்டர் மற்றும் கேப்டன்சியை சமாளிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவரின் பணியை மற்றவரால் செய்ய முடியாது. எனவே தான் மீண்டும் கேப்டன் பதவி தன்னிடம் வந்தது. இதில் வேறு எந்த பிரச்சினையும் இல்லை எனக் கூறினார்.

முன்னாள் வீரர் அதிருப்தி
இந்நிலையில் இதற்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் இர்ஃபான் பதான் ஆச்சரியம் அடைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒருவேளை ஜடேஜாவுக்கு கடந்தாண்டே கேப்டன்சி பற்றி தெரிவித்திருந்தால், மெகா ஏலத்தின் போது அவரின் முடிவுகள் தான் இருந்திருக்க வேண்டும். அவருக்கு ஏற்றார் போல தான் அணியின் கட்டமைப்பு இருந்திருக்க வேண்டும்.

நியாயமே இல்லை
தோனியை விட அதிக தொகை கொடுத்து தக்கவைத்தனர். கேப்டன் பதவி கொடுத்தனர். ஆனால் ஏன் சிஎஸ்கே நிலையான ஒரு முடிவில் இல்லை என்பது தான் பிரச்சினையாக உள்ளது. ருதுராஜ் கெயிக்வாட் கூடதான் பலமுறை சொதப்பினார். ஆனால் அவருக்கு இன்னும் நிர்வாகம் வாய்ப்பு தருகிறது. அப்படி இருக்கையில் ஜடேஜா விஷயத்தில் இவ்வளவு அவசரம் ஏன். அவருக்கு கேப்டன்சி அனுபவம் இதுவே முதல் முறை.எனவே அவருக்கே வாய்ப்பு தர வேண்டும் என கேட்டிருக்க வேண்டும் என இர்ஃபான் கூறினார்.

அடுத்த கேப்டன் யார்?
சென்னை அணியின் கேப்டனாக தோனி தற்போது இருந்தாலும், அடுத்தாண்டு யார் கேப்டனாக இருப்பார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இதுகுறித்து பேசிய தோனி, நான் அடுத்த ஆண்டில் சென்னை அணிக்காக இருப்பேன். ஆனால் எந்த மஞ்சள் ஜெர்ஸியில் இருப்பேன் என்பது தெரியாது என கூறினார். இதனால் அவர் ஆலோசகராக செயல்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications