
கவனம் ஈர்த்த தினேஷ் கார்த்திக்
பெங்களூரு அணியில் கேப்டன் டூப்ளசிஸ், விராட் கோலி என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப, கடைசி 2 ஓவர்களில் 17 ரன்கள் தேவைப்பட்டது. எனினும் தூக்கி அடிக்க முயன்றால் விக்கெட் என்ற சூழல் தான் நிலவியது. அந்த சமயத்தில் தான் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் மற்றும் பவுண்டரியை பறக்கவிட்டு, ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் 14 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரி என 32 ரன்களை குவித்தார்.

டூப்ளசிஸ் பெருமிதம்
இதன் மூலம் இந்த தொடரில் ஒரு நல்ல ஃபினிஷராக தினேஷ் கார்த்திக் உருவெடுத்து வருகிறார். நிதானமான செயல்பாடு, 200க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் என தனி கவனம் ஈர்த்துள்ளார். நேற்று இவரின் ஆட்டம் குறித்து பேசியிருந்த டூப்ளசிஸ், இக்கட்டான சூழலிலும் மிக பொறுமையாக கையாண்ட தினேஷ் கார்த்திக், எனது கண்ணுக்கு தோனியை போன்றே தெரிந்தார் என புகழ்ந்தார்.

தினேஷ் எடுத்த சபதம்
இந்நிலையில் இதற்கெல்லாம் காரணம் தினேஷ் கார்த்திக் எடுத்த ஒரு சபதம் தான். ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம், அவர் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு என்னால் கிரிக்கெட் ஆட முடியும். நிச்சயம் என்னால் இந்திய அணியில் ஃபினிஷர் பணியை செய்ய முடியும். வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவதே எனது குறிக்கோளாக இருக்கப்போகிறது.

கடுமையான பயிற்சிகள்
அதற்காக தான் சையது முஷ்டக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை என ஒன்று விடாமல் அனைத்திலும் விளையாடினேன். அதில் இருந்து எனக்கு நல்ல பயிற்சி கிடைத்தது. ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவேன் எனக்கூறியிருந்தார். இதற்கேற்றார் போல தான் தற்போது ஃபினிஷராக செயல்பட்டு வருகிறார்.

அடுத்த தோனி
டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணித்தேர்வில், ஐபிஎல் முக்கிய பங்கு வகிக்கும். அணியில் தோனிக்கு பிறகு ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து நம்பிக்கை தர ஒரு அனுபவ வீரர் இல்லை. பதற்றமின்றி ஆடக்கூடிய ஒரு ஃபினிஷர் இல்லை. மற்றொரு புறம், சூழலை புரிந்துக்கொள்ளாமல் அதிரடியை மட்டுமே நம்பியுள்ள ரிஷப் பண்ட் மீது ரோகித் நம்பிக்கையின்றி இருக்கிறார். எனவே தினேஷ் கார்த்திக் இதே போன்று செயல்பட்டால், நிச்சயம் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது பிரகாசம் ஆகும்.


Click it and Unblock the Notifications











